ஈ கூட தப்பிக்க முடியாதபடி இரும்பு ஆலையை அடைத்துவிடுங்கள் - புதின்
உக்ரைன் ரஷியா நாடுகளுக்கு இடையேயான போர் 55 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து, கிழக்கு உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரை குறிவைத்து நடத்தப்பட்ட ரஷியாவின் கடும் தாக்குதலால் அந்நகரம் உருக்குலைந்து போனது.
மரியுபோல் நகரம், உக்ரைனை விட்டு 'வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக' ரஷியா இன்று அறிவித்தது. உக்ரேனிய வீரர்கள் தங்கியிருக்கும் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையைத் தவிர அந்த நகரத்தை முழுமையாக ரஷியா கட்டுப்படுத்துகிறது என்று ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு அறிவித்தார்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், மரியுபோலின் வெற்றிகரமான விடுதலையை பாராட்டியுள்ளார். ஒரு ஈ கூட, தப்பிக்க முடியாதபடி இந்த தொழிற்பேட்டையை அடைத்துவிடுங்கள். ஆனால் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையைத் தாக்க வேண்டாம். அங்கிருந்து யாரும் தப்ப முடியாதபடி தடுப்பு நடவடிக்கைகள் மூலம் முற்றுகையிட்டு கைப்பற்றுங்கள் என்று புதின் ரஷிய படைகளிடம் அறிவுறுத்தி உள்ளார்.
மரியுபோல் ஸ்டீல் தொழிற்சாலை மீதான தாக்குதலுக்குப் பதிலாக அதனை முற்றுகையிட்டு கைப்பற்றுமாறு புதின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல், உக்ரைனை சீர்குலைக்கும் ரஷியாவின் நடவடிக்கையின் மையப் புள்ளியாக, நிலக்கரி மற்றும் எஃகு உற்பத்தி செய்யும் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதி இருந்து வருகிறது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்த வாரம் ஆற்றிய உரையில், “டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷியா தாக்குதலைத் தொடங்கியுள்ளது. டான்பாஸ்க்கான போர் தொடங்கிவிட்டது” என்று கூறினார். இப்போது மரியுபோல், ரஷியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் இன்னும் புது உத்வேகத்துடன் டான்பாஸ் பகுதியை கைப்பற்ற ரஷியா முனைப்பு காட்டும்.