கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஸ்மித்ஸ் பால்ஸ் அருகே நெடுஞ்சாலை 15 இல் இடம்பெற்ற மூன்று வாகன விபத்தில், 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளனர்.
காவல்துறையின் அறிக்கையின்படி, லோம்பார்டி பகுதியில் உள்ள கவுண்டி சாலை 1 மற்றும் கவுண்டி சாலை 5 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலையில் மாலை 5 மணியளவில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் ஆகியவை ஒன்றோடொன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான கார்களில் ஒன்றை ஓட்டிச் சென்ற 34 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது காரில் பயணித்த சிறுவன் ஒருவன் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், 'ஆர்ஞ்ச்' அவசர வான்வழி ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விபத்தின் போது அந்த ஆம்புலன்ஸில் நோயாளிகள் யாரும் இருக்கவில்லை. எனினும், அதில் பயணித்த ஓட்டுநரும் மற்றொரு நபரும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய மூன்றாவது காரில் ஓட்டுநர் மட்டுமே இருந்துள்ளார். அவர் லேசான காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த பயங்கர விபத்தை அடுத்து, அப்பகுதியூடான நெடுஞ்சாலை பல மணி நேரம் மூடப்பட்டு, பின்னர் மீண்டும் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டது. இவ்விபத்து குறித்து ஒண்டாரியோ மாகாண காவல்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான தகவல்களோ அல்லது விபத்து நடந்த இடத்தின் வீடியோ காட்சிகளோ யாரிடமாவது இருந்தால், உடனடியாக லீட்ஸ் கவுண்டி காவல்துறையை 1-888-310-1122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான். அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான். தப்பிக்க கடும் முயற்சி செய்தான். ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.
கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே? என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.
துறவி சொன்னார், அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது. அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று உரிமை பெற்று விட்டீர்களா?
வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்
முன்னொரு காலத்தில் வேத பட்டர் என்ற சிவபக்தர், இறைவனின் நைவேத்தியத்திற்காக நெல்லைக் காய வைப்பார். ஒருநாள் பெருமழை கொட்ட, "இறைவனின் நெல் வீணாகிறதே!" என்று பதறி ஓடிவந்தார். ஆனால் அங்கே ஒரு மகா அற்புதம்! சுற்றிலும் வெள்ளம் ஓட, அந்த நெல் மீது மட்டும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட படவில்லை!
ஆம், எம்பெருமான் சிவபெருமான் அந்த நெல்லைச் சுற்றி ஒரு "வேலி" போல நின்று காத்தருளினார்.
நெல்லை வேலியாகக் காத்ததால் "நெல்லையப்பர்"!
அந்தப் புண்ணிய பூமி "திருநெல்வேலி" (திரு + நெல் + வேலி) ஆனது!
தூண்களில் ஏழிசை! (The Musical Pillars
கோயிலின் மணிமண்டபத்திற்குச் சென்றால், அங்கே ஒரு உலக அதிசயத்தைக் காணலாம். அங்கிருக்கும் கல் தூண்களைக் கைகளால் மெதுவாகத் தட்டினால், அதிலிருந்து சரிகமபதநி என்ற ஏழு சுரங்களின் ஓசை (இசை) துல்லியமாகக் கேட்கும்! மாபெரும் சிற்பக் கலைக்குச் சான்றாக, 7-ம் நூற்றாண்டிலேயே பாண்டிய மன்னர்களால் இந்த அதிசயம் செதுக்கப்பட்டுள்ளது.
நடனமாடிய 'தாமிர சபை'
ஈசன் நடனமாடிய ஐந்து முக்கிய சபைகளில் (பஞ்ச சபைகள்) இது "தாமிர சபை" ஆகும். இங்குள்ள மர வேலைப்பாடுகளும், பிரம்மாண்ட சிற்பங்களும் பார்ப்போரைக் கண் இமைக்க விடாமல் செய்யும். ஆண்டுக்கு ஒருமுறை மார்கழி திருவாதிரையன்று இங்கு நடைபெறும் நடனக் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்!
தமிழகத்தின் பிரம்மாண்ட தேர்!
தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் நெல்லையப்பர் கோயில் தேரும் ஒன்று. ஆனிப் பெருந்திருவிழாவின் போது, இந்த மாபெரும் தேர் நெல்லை ரத வீதிகளில் அசைந்து ஆடி வரும் அழகைக் காண உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்!
கூடுதல் தகவல்:
இக்கோயில் வெறும் ஆன்மீகத் தலம் மட்டுமல்ல, சக்தி பீடங்களில் ஒன்றான "காந்திமதி பீடமாகவும்" திகழ்கிறது. சுவாமி கோயிலும், அம்மன் கோயிலும் தனித்தனியாக இருந்து, பின்னாளில் "சங்கிலி மண்டபம்" மூலம் இணைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தலம் இது!
பிறரிடம் ஒரு கடும் சொல்லைச் சொல்லுமுன் பேச முடியாதவர்களை நினைத்துப் பாருங்கள்.
உங்கள் சாப்பாட்டைக் குறை கூறும் முன் சாப்பிடவே வழி இல்லாதவர்களை நினைத்துப் பாருங்கள்.
உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ குறை கூறும் முன் வாழ்க்கைத் துணை வேண்டி வருந்துபவர்களை நினைத்துப் பாருங்கள்.
உங்கள் குழந்தைகளைக் குறை கூறும் முன் பிள்ளை வரம் வேண்டுபவர்களை நினைத்துப் பாருங்கள்.
உங்களுடைய வீட்டைக் குறை கூறும் முன் வீடில்லாமல் வீதிகளில் வசிப்பவர்களை எண்ணிப்பாருங்கள்.
உங்களுடைய வேலையைக் குறை கூறும் முன் வேலையில்லாமல் வாடுபவர்களை எண்ணிப் பாருங்கள்.
சோகத்தில் உங்கள் முகம் வாட விடாதீர்கள்.
வாழ்க்கை என்ற பரிசுக்கு நன்றி சொல்லி முகத்தில் புன்முறுவல் தவழ விடுங்கள்.
தெளிந்த மனம் தேர்ந்த சொற்களோடு நடைபயிலுங்கள்.
நல்லதே நடக்கும்.
(முழுமையாக படித்தால் மனத்திற்கு இதமாக இருக்கும்)
அப்பா...!!!
சக்திவேல் எழுபது வயதைக் கடந்த தாத்தா. ஒருநாள் அவர் ஒரு பூங்காவில் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கிருந்தார்.
பக்கத்தில் குழந்தைகள் விளையாடும் சத்தம்.
மரத்தில் பறவைகள் கத்தும் சத்தம்.
இந்த சூழலை ரசித்துக் கொண்டிருந்தார் சக்திவேல்.
வாழ்க்கையில் இனி ஓடி ஒளிய முடியாமல், பழைய நினைவுகளை உயர்த்திப் பிடித்து அசைபோடும் நிலை அது.
அதே பெஞ்சில் அவருடன் அமர்ந்திருந்த நண்பர்கள் யாரும் தற்போது உயிரோடு இல்லை.
அந்த சமயத்தில் ஒருவர் சக்திவேலின் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.
"மிஸ்டர் சக்திவேல்!
நான் தான் கடவுள். உங்களுக்கு ஆசை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன" என்றார் அவர் (கடவுள்).
ஆச்சரியப்பட்டார் சக்திவேல்.
யோசித்தார்.
பிறகு பேசினார்.
""கடவுளே! என் அப்பாவை நான் பார்க்க வேண்டும். அவரை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவீர்களா?"" என்று கேட்டார் சக்திவேல்..
""மிஸ்டர் சக்திவேல்! நீங்களே தாத்தாவாகி பல வருஷங்கள் ஆயிடுச்சு. இன்னமும் உங்கள் அப்பாவை பார்க்கும் ஆசை இருக்கிறதா?' என்று கேட்டார் கடவுள்.
''கடவுளே! ஆம். ... அவருக்கு நிகர் யாருமில்லை'' என்றார் சக்திவேல்..
‘அப்படியா!' என்றார் கடவுள்.
''அப்பா பலமுறை என்னிடம் கோபப்பட்டுள்ளார். தண்டித்திருக்கிறார். அப்போதெல்லாம் எனக்கும் கோபம் வரும். மனத்திற்குள் திட்டித் தீர்த்திருக்கிறேன். ஆனால், நானும் ஒரு அப்பாவாக மாறிய பிறகு அப்படிப்பட்ட கோபத்தில் இருக்கும் நியாயம் எனக்கு புரிந்தது. அதனால் இந்த நிலையில் அவர் என்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றார் சக்திவேல்.
''அதெல்லாம் சரி!
உன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று ஏன் உனக்கு தோன்றவில்லை?''' என்று கேட்டார் கடவுள்.
‘அப்பாவா? அம்மாவா?இதில் யார் தவிர்க்க முடியதவர் என்ற போட்டி தற்போது நடக்கவில்லை. திருமணமான பிறகு மனைவி அம்மாவின் இடத்தில் பாதியை நிரப்பிவிட்டார். ஆனால், அப்பாவின் இழப்பை இதுவரை யாரும் நிரப்பவில்லை. அதனால்தான் அப்பாவை பார்க்க விரும்பினேன்''', என்றார் சக்திவேல்..
''சரி! உன் அப்பா என்னை விட சிறந்தவரா? என்று கேட்டார் கடவுள்
''என் அப்பாவிடம் எதை கேட்டாலும் வாங்கிக் கொடுத்து விடுவார். ஆனால், என் அப்பாவையே கேட்டால், அது உங்களால் மட்டுமே கொடுக்க முடியும்.
அந்த வகையில் நீங்கள்தான் சிறந்தவர். ஆனால், அப்பா, என்னை ஒரு நல்ல தகப்பனாக உருவாக்கியிருக்கிறார்.
நான் என் மகனை அவனது பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக உருவாக்குவேன்.
ஆனால், நீங்கள் ஒரு நல்ல கடவுளை உருவாக்கியிருக்கிறீர்களா? உங்களால் முடியாததை செய்த என் அப்பாதான் சிறந்தவர்தானே?'' என்று கேட்டார் சக்திவேல்.
அமைதியானார் கடவுள்.
மீண்டும் சக்திவேல் பேசினார்.
''‘ராமன் காட்டுக்குப் போனான் என்றவுடன் உயிரை விட்டார் தசரதன்,
இந்திரஜித் இறந்தவுடனே பிணமாய் வாழ்ந்து உயிரை விட்டான் இராவணன்,
பிள்ளைக்கு சாகாவரம் பெற்றுத் தந்தார் துரோணர்.
இப்படி பிள்ளைகளுக்காக வாழ்ந்த அப்பாக்கள் ஏராளம். அந்த அப்பாக்கள் தவிர்க்க விரும்பிய விஷயம் ‘புத்திர சோகம்'.
ராமனை பிரிந்தவுடன் உயிரைவிட்டார் தசரதன். ஆனால், தசரதன் இறந்த பின் ராமன் இறக்கவில்லை. அதுதான் மகன் மீதான அப்பாவின் பாசத்திற்கும், அப்பாவின் மீதான மகனின் பாசத்திற்கும் உள்ள வித்தியாசம்', என்றார் சக்திவேல்.
ஆச்சர்யமாக பார்த்தார் கடவுள்.
'''‘ம்..... மேலே சொல்'' என்றார் கடவுள்.
''ஒருமுறை ஆபிஸுக்கு பஸ்ஸில் போய்க்கொண்டி ருந்தேன். பக்கத்தில் ஒரு பெண். என் முன்னால் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டிருந்தார்.
அடிக்கடி அவளுடைய முகத்தை பார்த்தேன். ஒவ்வொரு முறையும் ஒரு புன்சிரிப்பு தென்பட்டது.
அவளின் விரல்களில் ஒரு சிகப்புக் கல் வைத்த மோதிரம் இருந்தது. என்னை அறியாமல் அந்த சிகப்புக் கல்லை தொட்டுப் பார்த்தேன். வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டார். அப்போதுதான் அது தவறு என்று புரிந்தது.
அடுத்த ஸ்டாப்பில் அந்தப் பெண் இறங்கத் தயாரானார். கிளம்பிய பெண் சட்டென்று திரும்பி அந்த மோதிரத்தை என் கைகளில் திணித்துவிட்டு கிளம்பினார். அது ஒரு இன்ப அதிர்ச்சி. பஸ் கிளம்பியது. அந்தப் பெண் தூரத்தில் சென்று மறைந்தாள்.
அன்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எதிரில் அப்பா வந்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பஸ்ஸில் நடந்ததை அப்படியே ஒரு வரி மாறாமல் சொன்னேன். மோதிரத்தை அவரிடம் காட்டினேன். அவர் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ''நாளைக்கு அந்த மோதிரத்தை அவளிடம் திருப்பி கொடுத்துடு''என்று சொல்லிவிட்டு வாக்கிங்கை தொடர்ந்தார்.
வீட்டில் யாரிடமும் அவர் இதைப் பற்றி பேசவில்லை', என்று சொல்லிவிட்டு அமைதியானார் சக்திவேல்..
''அந்த மோதிரத்தை அடுத்த நாள் திரும்ப அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டீர்களா?'' என்று கேட்டார் கடவுள்.
சிரித்தார் சக்திவேல்.
‘இந்தக் கேள்வியை அப்பா என்னிடம் கேட்கவில்லை. ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள்.
அடுத்த நாள் அந்த மோதிரத்தை திரும்ப கொடுத்துவிட்டேன். ஆனால், அதைக்கூட அப்பாவிடம் சொல்லவில்லை.
அவரும் அந்த பதிலுக்காக காத்திருக்கவில்லை.
எங்களுக்குள் அப்படி ஒரு புரிதல் இருந்தது. அதனால்தான் சொல்கிறேன் என் அப்பா உங்களை விட சிறந்தவர்', என்றார் சக்திவேல்..
கடவுள் சிரித்தார்.
‘கடவுளே! அப்பா என்பது உன்னதமான உறவு. நம்மைச் சுற்றி நடக்கும் உண்மை நிலையை புரிந்துகொள்ளும் அற்புதமான நடைமுறை உலகத்து உறவு.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்
அப்பா என்பவர் நம்மைப் பற்றி முழுமையாகத் தெரிந்த முதிர்ந்த நண்பர்', என்றார் சக்திவேல்.
':அதெல்லாம் சரி! அப்பாவிடம் எதையாவது மறைத்திருக்கிறீர்களா?' என்று கேட்டார் கடவுள்.
‘ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறேன். நான் ஒரு பெண்ணை ஐந்து வருஷமாய் காதலித்து வந்தேன். பிறகுதான் தெரிந்தது அவளுடைய அப்பாவிற்கும் என் அப்பாவிற்கும் ஆகாது என்று. அதனால் காதலை அத்தோடு நிறுத்திக் கொண்டோம். அது வலி நிரம்பிய பிரிவு', என்று சொல்லும் போது சக்திவேலுவின் கண்களில் கண்ணீர் சேர்ந்தது.
‘மிஸ்டர் சக்திவேல்! நீங்க இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்ததை உங்க அப்பா கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.
இதோ அப்பா நிற்கிறார். இன்னும் சில நிமிடங்கள் அவர் உங்களோடு இருப்பார். பேசிக்கொள்ளுங்கள்', என்று சொன்னார் கடவுள்.
சக்திவேல் ஓடிச் சென்று அப்பாவை கட்டிப் பிடித்துக் கொண்டார். இருவர் கண்களிலும் கண்ணீர்.
''மகனே! என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா?
என் வரட்டு பிடிவாதத்தை விட்டுக் கொடுத்திட்டு அந்த பெண்ணையே திருமணம் செய்து வைச்சிருப்பேனே!', என்றார் அப்பா.
மெளனம் மட்டுமே பதிலாய் தந்தார் சக்திவேல்.
அப்பா பேசினார்.
''ஒரு அப்பாவிற்கு கிடைத்த பெரிய வரம் என்ன தெரியுமா?
அவர் மற்றவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வதுதான்.
அந்த விஷயத்தில் நீங்கள் எல்லோரும் என்னை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள். இதைவிட சிறந்த வரம் ஒரு அப்பாவிற்க்கு இருக்க முடியாது', என்றார் அப்பா.
‘அப்பா! நீங்க என் கூடவே தங்கிடுங்கப்பா!' என்று கெஞ்சினார் சக்திவேல்.
‘அது முடியாதுப்பா! என்னோட கதை முடிந்த கதை. வாழ்க்கையில ஒரு அப்பாவின் பங்கு என்ன என்பதை நீ நன்றாக புரிந்து வைத்திருக்கிறாய். அதை உன் மகனுக்கும் புரிய வைத்திருக்கிறாய். அவன், அவனுடைய மகனுக்கும் புரியவைப்பான். இதன் விளைவாக உலகம் நல்ல தகப்பன்களை உருவாக்கும். அது நல்ல குழந்தைகளை உருவாக்கும். இதை விட பெருமை எந்த தகப்பனுக்கும் கிடைக்காது. நான் பாக்கியசாலி. நான் கிளம்பறேன்', என்று சொல்லிவிட்டு சற்று தூரம் நடந்து மறைந்து போனார்.
சக்திவேல் அழத்தொடங்கினார்.
‘என்ன மிஸ்டர் சக்திவேல்! போதுமா? நான் கிளம்பட்டுமா?' என்று கடவுள் கேட்டார்.
‘கடவுளே! நான் பள்ளிக்குச் சென்ற முதல் நாளை என்றுமே மறக்க முடியாது. கையில் ஒரு சாக்லேட்டை கொடுத்து மரத்தடி பள்ளிக்கூட வகுப்பறையில் இறக்கிவிட்டு டாட்டா காண்பித்துவிட்டு கிளம்பினார் அப்பா.
நான் அழத் தொடங்கினேன். யார்யாரெல்லாம் சமாதானம் சொல்லியும் விம்மலும், அழுகையும் நிற்கவில்லை.
அப்பா சென்ற வழியை பார்த்து அழுதுகொண்டே யிருந்தேன், அப்பா அந்த வழியே வருவார் என்ற நம்பிக்கையோடு....
அதே நேரத்தில் அப்பா சற்று தொலைவில் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு நான் என்ன செய்கிறேன் என்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.
நிச்சயமாக அவரும் அழுதிருப்பார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அப்பா வந்தார்.என்னை தூக்கிகொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார். அவர் தோளில் சாய்ந்த நான் அப்படியே தூங்கிப்போனேன். இது என் முதல் நாள் பள்ளி ஞாபகம்'.
சக்திவேல் மீண்டும் பேசினார்.
‘கடவுளே! இன்றும் கிட்டத்தட்ட அதே நிலையில்தான் இருக்கிறேன். என்னை விட்டுச் சென்ற அப்பா மீண்டும் வரமாட்டாரா? என்று அவர் சென்ற வழியிலேயே காத்துக் கொண்டிருக்கிறேன்.
இப்போது அப்பா எந்த மரத்தடியில் ஒளிந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் தோளில் தூங்கினால் என்னுடைய எல்லாக் கவலைகளும் பறந்துபோகும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?' என்று கேட்டுவிட்டு அழுதார் சக்திவேல்..
(சக்திவேலுக்கு மட்டுமல்ல.. நம் அனைவருக்கும் மனச்சுமையை நீக்கும் அப்பாவின் தோள் கிடைக்குமானால், நம்மைவிட அதிர்ஷ்டசாலி யாரும் இருக்க முடியாது. அப்பா, நம்மில் விதைக்கப்பட்ட கற்பக விருட்சம்)
வாரணாசி நகரின் கங்கைக் கரையில் அதிகாலைப் பொழுது புலரத் தொடங்கியிருந்தது. பனிமூட்டமும், தூபப் புகையும் கலந்த அந்த அமைதியான காலை வேளையில், கையில் ஒரு பழைய கருப்புப் குடையைப் பிடித்துக்கொண்டு, ஒரு முதியவர் சாதாரணமாக நடந்து வந்து கொண்டிருந்தார். கிழிந்த தையல் போடப்பட்ட எளிய காட்டன் உடையும், காலில் தேய்ந்துபோன சாதாரண செருப்பும் அணிந்திருந்த அவரைப் பார்த்தால், ஏதோ ஒரு ஏழைக் குடும்பத்தின் பெரியவர் என்றுதான் தோன்றும். ஆனால், அந்த வாரணாசி மண்ணிற்கு அவர் வெறும் மனிதர் அல்ல, மனித வடிவில் நடமாடும் ஒரு தெய்வம். அவர்தான் பத்மஸ்ரீ டாக்டர் தபன்குமார் லாஹிரி.
அவருடைய இந்த உன்னதமான தியாகக் கதையை ஒரு அழகான காவியம் போல இங்கே பார்ப்போம்.
கதை தொடங்குவது கொல்கத்தாவின் ஒரு மிகப்பெரிய, வசதி படைத்த பாரம்பரியமிக்க குடும்பத்தில். தபன்குமாரின் தந்தை தாரகேஷ்வர் லாஹிரி, அந்த மாகாணத்தில் அசாத்தியப் புகழ்பெற்ற ஒரு வழக்கறிஞர். வீட்டில் செல்வத்திற்கு எந்தக் குறையும் இல்லை. தபன்குமார் நினைத்திருந்தால், தன் தந்தையின் பணத்தில் சொகுசாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், இளமையிலேயே அவரிடம் ஒரு துறவிக்கான அமைதியும், பிறர் துயர் துடைக்கும் இரக்க குணமும் குடிகொண்டிருந்தது.
மருத்துவப் படிப்பை முடித்த தபன்குமார், இதய அறுவை சிகிச்சையில் உலகத்தரம் வாய்ந்த நிபுணத்துவம் பெற வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து (UK) சென்றார். அங்குள்ள ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் நிறுவனத்தில் படித்து, மிக உயரிய எஃப்.ஆர்.சி.எஸ் (FRCS) பட்டமும் பெற்றார். 70-களில் ஒரு இந்திய மருத்துவருக்கு லண்டனிலும் அமெரிக்காவிலும் இருந்த மவுசே தனி. அங்கேயே தங்கியிருந்தால், பல நூறு கோடிகளுக்கு அதிபதியாகி, சொகுசு கார்களில் வலம் வந்திருக்கலாம். ஆனால், ஒருநாள் லண்டனின் ஜன்னல் வழியே பெய்து கொண்டிருந்த மழையைப் பார்த்துக் கொண்டிருந்த தபன்குமாரின் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. "இந்தக் கல்வி எனக்காகவா, அல்லது என் நாட்டு ஏழை மக்களுக்காகவா?"
அடுத்த கணமே தன் பெட்டிகளைக்கட்டினார். சொகுசு வாழ்க்கையை அப்படியே உதறிவிட்டு, தன் தாய்நாட்டிற்குத் திரும்பினார்.
1974 ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேசத்தின் ஆன்மீக பூமியான வாரணாசிக்கு வந்து சேர்ந்தார் தபன்குமார். அங்குள்ள புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) மருத்துவமனையில் ஒரு சாதாரண இதய அறுவை சிகிச்சை நிபுணராகத் தன் பணியைத் தொடங்கினார். அப்போது அந்த மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்கான வசதிகள் மிக மிகக் குறைவு. டெல்லி போன்ற பெருநகரங்களுக்குச் செல்ல காசில்லாமல், ஏழை மக்கள் மாரடைப்பாலும் இதய நோய்களாலும் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருந்தனர்.
டாக்டர் தபன்குமார் களத்தில் இறங்கினார். பகல், இரவு பாராமல் உழைத்து, அதிநவீன மருத்துவக் கருவிகளை வரவழைத்து, அந்தத் துறையையே வட இந்தியாவின் மிக முக்கிய இதய சிகிச்சை மையமாக மாற்றிக் காட்டினார். தன் அசாத்திய கைவண்ணத்தால், முப்பத்தி நாலாயிரத்திற்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சைகளைச் செய்து, மரணத்தின் விளிம்பில் இருந்த பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்களின் இதயங்களை மீண்டும் துடிக்க வைத்தார்.
அது 1994 ஆம் ஆண்டின் ஒரு குளிர் காலம். அன்று இரவு ஒரு மிகச் சிக்கலான இதய அறுவை சிகிச்சையை முடித்துவிட்டு, டாக்டர் தபன்குமார் தன் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனையின் வராந்தாவில் ஒரு ஏழைத் தாய், தன் கையில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய கணவனுக்கு இதயம் பலவீனமாக இருந்தது. அறுவை சிகிச்சை இலவசமாக முடிந்தாலும், அதற்குப் பின் வாங்க வேண்டிய மருந்துகளுக்கு அவளிடம் ஒரு பைசாகூட இல்லை.
அந்தத் தாயின் கண்ணீரும், அவல நிலையும் டாக்டர் தபன்குமாரின் இதயத்தை உலுக்கியது. "லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி பேங்கில் சேர்த்து வைக்கும் இந்த காகிதப் பணம், என் கண் முன்னால் இருக்கும் ஒரு ஏழையின் உயிரைக் காப்பாற்ற உதவாதபோது இந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?" என்று யோசித்தார்.
அன்றைய இரவே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்தார். மறுநாள் காலை பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். "இனிமேல் என் வாழ்நாளில் எனக்கு வரும் சம்பளத்தில் ஒரு பைசாகூட என் சொந்தப் பயன்பாட்டிற்கு வேண்டாம். அதை அப்படியே பல்கலைக்கழகத்தின் 'ஏழை நோயாளிகள் நிதிக் கணக்கிற்கு' மாற்றிவிடுங்கள்" என்று எழுதித் தந்துவிட்டார். அன்று முதல், மருத்துவமனையில் நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் எளிய உணவையே தானும் உண்டு வாழத் தொடங்கினார்.
தன் ஒட்டுமொத்த கவனமும் நோயாளிகளுக்கே கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை. குடும்பம், வாரிசு, பந்தபாசம் என எல்லாவற்றையும் துறந்து பிரம்மச்சாரியாக வாழ்ந்தார். கொல்கத்தாவில் தனக்கு வர வேண்டிய பூர்வீகச் சொத்துக்கள் அனைத்தையும் தன் உடன்பிறந்தவர்களுக்கே தந்துவிட்டு, வெறும் ஒரு ஜோடி உடைகளுடனும், தன் ஸ்டெதாஸ்கோப்புடனும் வாரணாசியிலேயே தங்கிவிட்டார்.
2003 ஆம் ஆண்டில் அவர் பணி ஓய்வு பெற்றார். பொதுவாக, ஒரு பெரிய ஹார்ட் சர்ஜன் ஓய்வு பெற்றால், பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகள் போட்டிப் போட்டுக் கொண்டு பல கோடிகளை வாரி வழங்கி தங்களோடு வைத்துக் கொள்ளத் துடிக்கும். ஆனால், இவரோ வாரணாசியை விட்டு நகர மறுத்துவிட்டார். இவருடைய உன்னதச் சேவையைக் கண்டு வியந்த பல்கலைக்கழகம், இவருக்கு "எமரிட்டஸ் பேராசிரியர்" என்ற கௌரவப் பதவியை வழங்கி, அங்கேயே தங்குவதற்குக் கட்டணமில்லா ஒரு சிறிய குடியிருப்பு வசதியையும் தந்தது.
ஓய்வு பெற்று 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் ஒரு பைசாகூடச் சம்பளம் வாங்காமல், அதே மருத்துவமனைக்கு தினமும் சென்று நோயாளிகளைப் பார்த்து வருகிறார். இவருக்கு வரும் ஓய்வூதியத் தொகையில் (Pension) தன் எளிய உணவுத் தேவைக்காக ஒரு மிகச் சிறிய தொகையை மட்டும் வைத்துக் கொண்டு, மீதி முழுப் பணத்தையும் இன்றும் ஏழை எளிய மக்களின் மருந்துச் செலவிற்காகவே வாரி வழங்கி விடுகிறார்.
தன் 80 வயதைக் கடந்த நிலையிலும், தன் வீட்டிற்கு வேலைக்குக்கூட யாரையும் வைத்துக் கொள்ளாமல், தன் துணிகளைத் துவைப்பது, சமையல் செய்வது என அத்தனையையும் தன் கைகளாலேயே செய்து வருகிறார். இவருக்கு என்று ஒரு சைக்கிள்கூடக் கிடையாது. தினமும் காலையில் தன் கையில் ஒரு பழைய கருப்புப் குடையையும், ஒரு சாதாரணக் கைப்பையையும் பிடித்துக்கொண்டு, மருத்துவமனைக்குச் சாதாரணமாக நடந்தேதான் செல்வார்
2016 ஆம் ஆண்டு, பாரத நாடு இந்த நடமாடும் தெய்வத்தைக் கண்டுகொண்டது. இந்திய அரசு இவருக்கு நாட்டின் மிக உயரிய "பத்மஸ்ரீ" விருதை அறிவித்தது. டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவரிடம் விருதைப் பெற்றுக் கொன்றார்.
இன்று உலகமே பணத்தின் பின்னாடியும், ஆடம்பரத்தின் பின்னாடியும் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், "மனிதநேயம் மட்டுமே உலகம்" என்பதைத் தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியிலும் நிரூபித்துக் காட்டியுள்ளார் டாக்டர் தபன்குமார் லாஹிரி.
"கடவுள் எங்கே இருக்கிறார்?" என்று தேடி அலைய வேண்டியதில்லை. வாரணாசியின் வீதிகளில் ஒரு பழைய கருப்புப் குடையைப் பிடித்துக்கொண்டு, கையில் ஸ்டெதாஸ்கோப்புடன் புன்னகையோடு நடந்து போகும் இந்த மாமனிதரின் ரூபத்தில் கடவுள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். மனிதநேயம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதற்கு இவரே ஒரு நடமாடும் சாட்சி.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் ரயில் நிலையம் அருகே, எலும்பும் தோலுமாக மாறி, மிகவும் பரிதாபகரமான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு பெண் 2007 ஆம் ஆண்டு தெருவோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தென்னிந்தியாவையே உலுக்கிய ஒரு சோகமான உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த நிலையில் கிடந்தவர் வேறு யாருமல்ல; ஒரு காலத்தில் தனது இயற்கை அழகாலும் கவர்ச்சியான புன்னகையாலும் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்த, அந்நாளைய முன்னணி நடிகர்களின் நாயகியாகத் திகழ்ந்த நடிகை நிஷா நூர் தான்.
ஒரு திரைப்பட தயாரிப்பாளருடன் ஏற்பட்ட காதல் உறவுதான் அவரது வாழ்க்கை சிதைவதற்கான தொடக்கமாக அமைந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் திரைப்படத் துறையைச் சேர்ந்த பலரால் அவர் பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சுரண்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இறுதியில், அவரது காதலர் அவர் சம்பாதித்த சொத்துக்களை கைப்பற்றிய பின் அவரை கைவிட்டுச் சென்றதாகவும், இதனால் அவர் முற்றிலும் தனிமையில் தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் தாயாரின் மரணமும் அவரை மனரீதியாக கடுமையாக பாதித்தது.
1980 மற்றும் 1990-களில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் முக்கிய நடிகையாக விளங்கிய நிஷா நூர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார். ஆனால் தனது திரையுலகப் பயணத்தின் உச்சத்தில் இருந்தபோதே துரதிர்ஷ்டம் அவரை துரத்தத் தொடங்கியது.
வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த பெரிய பின்னடைவுகளுக்குப் பிறகு அவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் திரைப்பட உலகமும் புகழின் வெளிச்சமும் அவரை விட்டு விலகின. ஒருகாலத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அந்த பெயர், திரைப்படத் துறையிலிருந்தே மெல்ல மறைந்து போனது.
இறுதியாக, 2007 ஏப்ரல் 23 ஆம் தேதி, வெறும் 44 வயதிலேயே நிஷா நூர் இந்த உலகை விட்டு பிரிந்தார். திரையுலகின் புகழும் பிரகாசமும் நிரந்தரமானவை அல்ல என்பதை நினைவூட்டும் பல வாழ்க்கைக் கதைகளில் இதுவும் ஒன்று. ஒருகாலத்தில் பெரும் புகழும் செல்வமும் பெற்றவர்கள்கூட, வாழ்க்கையின் இறுதியில் தனிமையிலும் துயரத்திலும் தள்ளப்படலாம் என்பதை உணர்த்தும் சோகமான கதையாக நிஷா நூரின் வாழ்க்கை இன்று நினைவுகூரப்படுகிறது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். பணி சுமையினால் கோபங்கள் அதிகரிக்கும். இயந்திர துறைகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
மனம் விரும்பியபடி சில பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கலைப் பொருள்கள் மீது ஆர்வம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளிவட்டார தொடர்புகள் மேம்படும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர்
மிதுனம்
நெருக்கமானவர்களிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். சில புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவுகள் உயரும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தொழில் ரீதியான தொடர்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
வீட்டை விரிவுபடுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதை தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். அரசால் ஆதாயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கன்னி
மனதளவில் இருந்து குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வியாபார நிமித்தமான நவீன கருவிகளை கொள்முதல் செய்வீர்கள். கொடுக்காமல் இருந்த இழுபறிகள் மறையும். எதிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
துலாம்
விமர்சன பேச்சுகள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளால் அலைச்சல்கள் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். விளையாட்டுகளில் கவனத்துடன் செயல்படவும். புதிய உணர்வுகளை உண்டு மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
விருச்சிகம்
சுபகாரியம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். சகோதர வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். திறமைக்கான மதிப்புகள் மதிப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். புதிய நபர்களின் அறிமுகங்களால் மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
தனுசு
வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். கலைப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். புதிய நபர்களிடம் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். கடன் நெருக்கடிகள் குறையும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முயற்சிக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் சந்திப்புகள் ஏற்படும். கட்சிப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வாகன வழியில் சில விரயங்கள் நேரிடலாம். பேச்சுக்களில் தன்னம்பிக்கை வெளிப்படும்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கும்பம்
எதிலும் பொறுமையுடன் செயல்படவும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம்
திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில இடமாற்றங்கள் நேரிடலாம். கணவன்-மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 31.5.2026.
இன்று பிற்பகல் 02.45 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.
இன்று மாலை 04.46 வரை அனுஷம். பின்னர் கேட்டை.
இன்று காலை 06.12 வரை சிவம். பின்னர் சித்தம்.
இன்று அதிகாலை 01.49 வரை பத்திரை. பின்னர் பிற்பகல் 02.45 வரை பவம். பிறகு பாலவம்.
இன்று அதிகாலை 05.51 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
சௌதி அரேபியாவில் ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்தது அந்த குழந்தை.
இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை செய்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். கணவர் இலங்கையில் சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் .
இந்த வீட்டுவேலை செய்யும் அம்மணி தான் இந்த குழந்தைக்கு எல்லாமே. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இவள் தான். தூங்கக் கூட இந்த குழந்தை பெற்றோரிடம் செல்லாது. தூங்கிய பின்பு, தூக்கிக்கொண்டு அவர்களின் ரூமுக்கு கொண்டு செல்லுவார்களாம் பெற்றோர்கள்.
குழந்தைக்கு 2 வருடம் ஆகி இருக்கும். வீட்டுவேலை செய்யும் இந்த பெண்மணி விடுமுறைக்கு ஊர் செல்ல பலமுறை அனுமதி கேட்டும், முடியாத சூழ்நிலையில் தள்ளிக்கொண்டே போனது. மிகுந்த போராட்டத்திற்குப் பின்பு 3 மாதம் விடுமுறையில் ஸ்ரீலங்கா சென்றார் அம்மணி.
தன்னை பிரிந்த அடுத்த நிமிடத்தில் அழ ஆரம்பித்து விட்டது அந்த குழந்தை. சரி, சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று இருந்து விட்டார்கள்.
இரவு உணவு உண்ணவில்லை. ஒரே அழுகை. அழுது.. அழுது.. துவண்டு தூங்கி விட்டது. அப்படியே தூங்கட்டும். காலையில் விழித்ததும் பசிக்கும், சாப்பிடும். என்று விட்டு விட்டார்கள்.
காலையில் விழித்ததும் ஈனக்குரலில் அழ ஆரம்பித்து விட்டது. சாப்பாடு ஊஹூம். அருகில் இருக்கும் சாமான்களை பலம் இல்லாத கையால் தூக்கி எறிவதும், துவண்டு விழுவதுமாக இருந்தது. சில மணித்துளியில் மயங்கி விழுந்து விட்டது.
பயந்து போன பெற்றோர்கள் மருத்துவமனையில் அட்மிட் பண்ணி விட்டார்கள். அனைவர்களுக்கும் ஒரே கவலை. மூன்று நாட்களாக ட்ரிப் மூலம் தான் அனைத்தும் நடந்து வருகிறது.
டாக்டர்களுக்கு ஒன்றும் ஓடவில்லை. எந்த மருத்துவமும் கைகொடுக்க வில்லை. மூன்று நாட்களாக கண் திறந்து பார்க்கவில்லை. மருத்துவர்கள் கையை விரித்து விட்டார்கள்.
ஒரே மருந்து..!!!! அந்த வேலைக்கார பெண் இங்கு வந்தே ஆகனும். இல்லை என்றால் இப்படியே கோமாவில் தான் குழந்தை இருக்கும். அதன் பின்பு ஒன்றும் நல்லது சொல்ல இயலாது என்று கூறி விட்டார்.
அந்த அரபி அந்த அம்மணியை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயன்றும் முடியாமல் ஒட்டு மொத்த குடும்பமும் உருக்குலைந்து இருந்தது.
பல வருடங்களுக்கு முன்பு, இந்த ஸ்ரீலங்கா பெண்மணி, வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனம் மூலம் வந்தவர். முதல் நாள் அவளை அழைத்து செல்ல வந்த சௌதி, அவள் பேசும் தமிழ் புரியாமல், வேறு தமிழர் ஒருவர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
அதை நினைவில் வைத்துக்கொண்டு, அந்த நபரை தேடி கண்டுபிடித்தார் ,அவளும் அதே ஊராக இருக்கும் என்று நினைத்து விபரங்கள் கூறி குழந்தை போல அழுதார். ஒரு மல்டி மில்லினர், பல நிறுவனங்களுக்கு அதிபதி, குறைந்தது 15 ஆயிரம் நபர்களாவது இவரிடம் பணி புரிகிறார்கள். கூடவே மன்னர் குடும்பத்தில் பெண் எடுத்தவர்..!! விபரம் சொன்னார்.
அவர் அந்த அரபியிடம், தமிழ் மொழி பல நாடுகளில் பேசுகிறார்கள். நான் இந்தியா, அவள் ஸ்ரீலங்கா. என்று விவரித்துக்கொண்டு இருக்கும் போது, அவருக்கு மூலையில் ஒரு மின்னல் வெட்டியது.
அந்த அம்மணி கூறிய அவளுடைய ஊரும், இவருக்கு பழக்கமான ஒரு ஸ்ரீலங்கா டிரைவரின் ஊரும் ஒன்று. அடுத்தடுத்த தெரு. அவரை பிடித்தார் , அவரின் மனைவிக்கு போன் போட்டு, அடுத்த தெருவில் இருந்த வேலைக்கார அம்மணியை தொடர்பு எல்லைக்குள் கொண்டு வந்து, சௌதியிடம் பேச வைத்து விட்டார் .
ஒரு 40 நிமிடத்தில் அனைத்தும் முடிந்து விட்டது. ஆனால் அந்த வேலைக்கார அம்மணியோ, நான் வந்து 4 நாட்கள் தான் ஆகிறது, கணவனுக்கு இளைப்பு நோய் வந்து மருத்துவமனையில் அட்மிட் பண்ணி இருக்கின்றோம். நான் எப்படி வர இயலும் என்று தன்னுடைய இயலாமையை கூற,
சௌதி இவரிடம் பேச சொல்ல, இவர் இந்த குழந்தையின் நிலைமையை சொல்ல, அவள் அழுக, அவளின் சூழ்நிலையை சொல்ல. அதை அனைத்தையும் சௌதியிடம் இதைப்பற்றி கூறினார் .
அவரோ தேம்பி தேம்பி அழுது கொண்டு, என் சொத்து அனைத்தும் போனாலும் பரவாயில்லை. எனக்கு என் குழந்தை வேண்டும் என்று கூறினார்.
சரி, அவளுடைய குடும்பத்திற்கு விசா ஏற்பாடு பண்ணுங்க என்று கூறி, அவளிடம் அனுமதியும் வாங்கி விட்டார் . அடுத்து கூடுதல் பிரச்சனை.அவளுடைய கணவருக்கும் குழந்தைகளுக்கும் பாஸ்போர்ட் இல்லை. சிறிலங்காவிற்குவிசா கிடைப்பது அரிது. அதுவும் பாமிலி விசா-குதிரைக்கொம்பு. அப்படி விசா கிடைத்தாலும், ஸ்டாம்பிங் அடித்து வர குறைந்தது 4 வாரங்கள் ஆகும்.
அதுவரை குழந்தை தாங்குமா என்ற பல சங்கடங்களை அவரிடம் விவரித்தார்.
அவரோ, நோ ப்ராப்ளம். என் மனைவி ஒரு அமீரா(இளவரசி) என்று கூறி, அதிசயத்திலும் அதிசயமாக 2 நாட்களில் அனைத்தும் முடிந்து, அவர்கள் அனைவர்களும் தம்மாம் ஏர்போர்ட் வந்து இறங்கி விட்டார்கள்.
குழந்தையின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. கசக்கி போட்ட சிறு துண்டு போல கிடந்தது. ஒரு சிறு அசைவு கூட இல்லை.
நேராக அவர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள் .
மருத்துவமனையே பரபரப்பாக ஆகிவிட்டது. குடும்பத்தார்கள் கூட்டம் ஒருபக்கம். நண்பர்கள், நிறுவனத்தில் முக்கிய ஆட்கள் என்று பெரும் கூட்டம்.
குழந்தை இருந்த அந்த சூட்-க்குள் அவர்கள் நுழைந்தார்கள். குழந்தை இருந்த நிலையை பார்த்ததும் அந்த வேலைக்கார அம்மணி கதறி விட்டார். அவளை தேற்றி ஆறுதல் படுத்தி, குழந்தைக்கு அருகில் அழைத்துச் சென்றனர் .
மெதுவாக அம்மணி, ஆதில், ஆதில், ராஜா (தமிழில் தான்) என்று கூற கூற காலின் பெருவிரல் அசைய ஆரம்பித்தது. இங்கிலாந்து மருத்துவர் சைகை காட்ட காட்ட அந்த அம்மணி ஆதில் ஆதில்.. ராஜா.. ராஜா.. என் ராஜா.. என்று கூறக் கூற , ஒரே நிசப்தம்.
அனைவருக்கும் எதோ ஒரு தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டு இருப்பது போல ஒரு உணர்வு.
சிறிது சிறிதாக குழந்தையிடம் அசைவு தெரிய.. அனைவர்களின் முகத்திலும் பிரகாசம் தெரிய ஆரம்பித்தது.
ஒரு 20 நிமிடத்தில் கண்ணை திறந்தான், அருகில் இருக்கும் கத்தாமாவை பார்த்தான், எப்படிதான் அவன் உடலில் இவ்வளவு சக்தி இருந்ததோ தெரியவில்லை, சடார்….. என்று எந்திரிக்க, உடலில் இணைக்கப்பட்ட வயர்கள், டியூப்கள் எல்லாம் தெறிக்க, அவளை கட்டிப்பிடித்து, முதுகில் குத்து குத்து என்று குத்தி, கறுத்த அவளுடை முகத்திலும், கழுத்திலும், முத்தங்கள் பொழிய அனைவர்களுடைய கண்களிலும் கண்ணீர் உருண்டு ஓடியது.
எத்தனை பாசமலர் படம் பார்த்தாலும் இந்த காட்சி கிடைக்காது.
அங்கு வந்து இருந்த அனைத்து பெண்மணிகளும் அந்த வேலைக்காரியை முத்தத்தால் நனைத்தார்கள். சிறிது நேரத்தில் அந்த வளாகம் குதூகலமாகவும், சந்தோசமாகவும், ஒரு பார்ட்டி ஹால் மாதிரி உருமாறி விட்டது.
அந்த வேலைக்கார பெண்மணி சாப்பிட்டுக்கொண்டு இருந்த எச்சில் பட்ட கேக்கை, அந்த குழந்தை பிடுங்கி தின்ன, கூடி இருந்த அனைவர்களும் ரசித்து பார்க்க.. ஒரே பரவசம் தான்.
அப்புறம், அவருடைய கணவருக்கு அதே மருத்துவமனையில், அதே சூட்டில் மருத்துவம், அவர்களின் நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் வேலை, குழந்தைகளுக்கு நம்ப முடியாத பள்ளியில் உயர்ந்த கல்வி.
கொடுக்க நினைப்பவன் கொடுக்க நினைத்தால்…..வாழ்க்கை வசந்தமே.
குதிரை திருட்டு வழக்கில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் மீது, குதிரை வளர்ப்பு மற்றும் குதிரைப் பந்தயத் துறையுடன் தொடர்புடைய மற்றொரு விசாரணையின் அடிப்படையில் புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஹால்டன் பிராந்திய காவல்துறையின் தகவலின்படி, ஒண்டாரியோ மாநிலத்தின் மில்டன் பகுதியில் ஒரு குதிரையை திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்தப் பெண் ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்திருந்தார்.
அதன் பின்னர், மே மாதத்தில் நிபந்தனை பிணையில் இருந்தபோது, அதே சந்தேக நபர் பொய்யான அடையாளத்தை பயன்படுத்தி ஒரு நபரை சந்தித்து, அவரிடமிருந்து ரகசிய தகவல்களைப் பெற முயற்சித்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காவல்துறையினர் கூறுகையில், சந்தேக நபர் ஹெய்லிவுட் என்ற போலிப் பெயரை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட நபரின் தனிப்பட்ட மற்றும் ரகசிய தகவல்களைப் பெற முயன்றுள்ளார். மேலும், அந்த நபருடன் தொடர்புடைய கல்வி நிறுவனங்களையும் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற முயற்சி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எந்த வகையான தகவல்களைப் பெற முயன்றார் என்பது குறித்து காவல்துறையினர் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கவனித்த பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையினரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
ஒண்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்த வாட்டர்டவுனைச் சேர்ந்த 30 வயதுடைய கார்லி ட்ரிப் மீது தற்போது, குற்றவியல் தொந்தரவு, நீதிமன்ற விடுதலை நிபந்தனைகளை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர், ஏப்ரல் மாதத்தில் அவர் மீது, 5,000 கனடிய டொலருக்கு மேற்பட்ட திருட்டு, மோசடி மூலம் கால்நடைகளை அபகரித்தல், விலங்குகளை காயப்படுத்துதல் அல்லது ஆபத்தில் ஆழ்த்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த இரண்டு விசாரணைகளும் குதிரைத் தொழில்துறையுடன் தொடர்புடையவை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கனடாவின் டொரண்டோ பெரும்பாக பகுதி (GTA) முழுவதும் இதேபோன்ற பல சம்பவங்களில் இந்த பெண் தொடர்புடையவராக இருக்கக்கூடும் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
1. ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தவுடன் .. இது சொந்த வீடா ..வாடகை வீடா … வாடகை எவ்வளவு…. என்று கேட்க ஆரம்பிக்காதீர்கள் .. (அவர்கள் எந்த வீட்டில் இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)
2 . நீங்க முதலியாரா .. கவுண்டரா .கிரிஸ்டியனா என்று கேட்டு சங்கடப்படுத்தாதீர்கள் . (அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் மேற்கொண்டு நீங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை)
3.வீட்டிற்குள் நுழைந்தவுடன் அவர்களின் பொருளாதார நிலையை அறிய கண்களாலே துழவாதீர்கள்.
4.வீட்டிற்கு வந்தவர்களிடம் .. காபியா டீயா என்றால் .. கொடுங்கள் என்று அன்போடு கேட்டு அருந்துங்கள். அல்லது மோரோ ,குளிர்பானமோ ..கொடுப்பதை மனம் குளிர்ந்து அருந்துங்கள். இப்பதான காபி சாப்பிட்டு வந்தேன் .. என்று அலட்சியப் படுத்தாதீர்கள்.
5.வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுக்க வரும்போது .. அவர்களிடமே பேர் கேட்டு எழுதாதீர்கள்.
6.வீட்டிற்கு வந்தவர் வருகிறேன் என்று சொல்லி வெளியில் சென்று தெருவில் நடக்கும் வரை /வாகனம் எடுக்கும் வரை அவர்களிடம் கண்களால் உரையாடுங்கள். மாறாக உடனே கேட்டையோ ,கதவையோ சாத்தாதீர்கள்.
7.ஏன் உங்க மனைவி வேலைக்கு போறாங்க … ? அல்லது ஏன் வேலைக்கு போகல.. என்று ஆராய்ச்சி கேள்வி கேட்காதீர்கள்.
8.சாப்பாட்டு நேரத்துல வந்தவங்க கிட்ட “சாப்பிடுறீங்களா” என்று கேட்கும் வீட்டில் பச்சை தண்ணி கூட குடிக்காதீர்கள்.மாறாக “சாப்பிடுங்க “என்று சொல்ற வீட்டில நிச்சயமாக சாப்பிடுங்க.
9.பையன் அல்லது பொண்ணு என்ன பண்றா.. என்று கேட்காதீர்கள்… வேண்டுமென்றால் உங்கள் பையன் அல்லது பொண்ணு என்ன படிக்கிறார்கள் /எங்கு வேலை செய்கிறார்கள் .. என்று சொல்லுங்கள்..
கேட்பவருக்கு பிடித்திருந்தால் அவர் சொல்லட்டும்..அவரை வற்புறுத்தாதீர்கள்.
10.friendly ஆ பேசறேன் ,உரிமையில பேசறன்னு …பொதுவுல …அவங்களுக்கோ அவங்க பிள்ளைகளுக்கோ advice பண்ண ஆரம்பிக்காதீர்கள்.
11.உங்களுக்கு என்ன குறைச்சல்.. இரண்டு பேரு சம்பளம் … பையன் கை நிறைய சம்பாரிக்கிறான் …இப்படி சொல்றவங்க கிட்ட../நினைக்கறவங்க கிட்ட தள்ளியே நில்லுங்க.
12.நீங்க எங்கெல்லாம் plot/flat வாங்கி வச்சிருக்கீங்களோ…. வந்த இடத்தில் பட்டியலிடாதீர்கள்.. இது அவருக்கு அவர் மனைவி முன் மிகுந்த தர்ம சங்கடத்தை உருவாக்கும்.
13.வந்த இடத்தில் உங்கள் புத்திசாலித்தனத்தை காட்டாதீர்கள்.. மாறாக அன்பை காட்டுங்கள்.
14. வீட்டிற்கு வருபவர்களிடம் பிள்ளைகளை அறிமுகப்படுத்தி அவர் எந்த வகையில் உறவினர் அல்லது நண்பர் … என்று… பிள்ளைகள் மூலம் உங்கள் உறவுகளுக்கு பாலம் அமையுங்கள்.
15. வீட்டிற்கு வந்தவர்களிடம் கணவனை அல்லது மனைவியை விட்டு கொடுக்காமல் பேசுகிறேன் என்று தற்பெருமை, தம்பட்டம் அடிக்காதீர்கள்.. அல்லது.. வீட்டிற்கு வந்தவர்களிடம் தனது மனைவி/கணவன் பற்றியோ விளையாட்டு க்கு சொல்கிறேன் என்று கிண்டலடிக்காதீர்கள்....
சுமையென நினைத்த தந்தை; உயிரெனக் காத்த மகள்
"என்னைச் செலவு செய்து வீணாக்காதே... என்னை விட்டுவிடு."
சீனாவின் ஒரு மருத்துவமனை வளாகத்தில் நோயால் வாடிய அந்த முதியவர், தன் மகள் மீது பாரமாக இருக்கிறோம் என்று கருதி நெஞ்சை உருக்கும் வகையில் இந்த வார்த்தைகளைக் கூறினார்.
சிகிச்சைக்கு ஆகும் பெரும் செலவையும், மகளின் சேமிப்பு கரைந்து போவதையும் அவர் உணர்ந்திருந்தார். தன் மகளைக் கடனாளியாக்குவதை விட, தான் மறைந்து போவதே மேல் என்று கடினமான முடிவை எடுத்தார். மகளின் கையை விட்டுவிட்டு, அவளுக்குச் சுமையைக் குறைப்பதற்காக அங்கிருந்து செல்லத் துணிந்தார்.
ஆனால், அவள் அவரைப் போகவிடவில்லை. மருத்துவமனையிலிருந்த அனைவர் முன்னிலையிலும், குளிர்ந்த தரையில் சரிந்து விழுந்த அந்த மகள், தன் தந்தையின் கால்களைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு, உலகத்தின் கடைசி நம்பிக்கையைப் பிடித்துக் கொள்வது போலக் கதறி அழுதாள்:
"தயவுசெய்து போகாதீர்கள் அப்பா! நீங்கள் மட்டும்தான் எனக்கு மிச்சம்!"
அந்த வலியில் பொதிந்த உண்மை
- உணர்ச்சிக் கொந்தளிப்பு: அந்த வீடியோ காட்சி சிறியதுதான்; ஆனால் அதில் இருக்கும் வலியும் அர்த்தமும் சொல்லில் அடங்காதது.
- நிதர்சனம்: நோயாளிகளைப் பராமரிப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் சோர்வைத் தரும்.
- முடிவு: அந்த நோயாளி உங்களுக்கு உயிர் கொடுத்த தந்தையாக இருக்கும்போது, மற்ற அனைத்துக் கணக்குகளும் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன.
அன்று, ஒரு அடிப்படையான உண்மையை அந்தத் தந்தை உணர்ந்தார். அவனது மகளுக்குத் தேவை பணம் அல்ல, அவர் தான். அவளுடன் இன்னும் ஒரு நாள், இன்னும் ஒரு மணி நேரம், அல்லது இன்னும் ஒரு நொடி கூட இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
வயது முதிர்ந்த நிலையில் பல தந்தைகள் தங்களை ஒரு சுமையாக நினைக்கிறார்கள்; ஆனால், அன்பான பிள்ளையின் இதயத்தில் தந்தை ஒருபோதும் சுமை அல்ல. தந்தை என்றும் பிள்ளைக்கு அடித்தளம்; அவரே அனைத்திற்கும் ஊற்றுக்கண்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (89) வயது மூப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து அஜித்குமார் குடும்பத்தினர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் "எங்கள் அன்புத் தாயார் மோகினி மணி அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை தனது உறக்கத்திலேயே இயற்கை எய்தினார். அவருக்கு வயது 89.
கடந்த சில ஆண்டுகளாக அவருக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் அர்ப்பணிப்புடன் மருத்துவ சேவையையும் ஆதரவையும் வழங்கிய அனைத்து மருத்துவ நிபுணர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த துயரமான தருணத்திலும், அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்ததையும், அன்பும் அக்கறையும் நிறைந்த உறவுகளால் சூழப்பட்டிருந்ததையும், அவரை அறிந்த அனைவரின் உண்மையான மரியாதையையும் பெற்றிருந்ததையும் நினைத்து ஆறுதல் அடைகிறோம். அவரது கனிவான இயல்பு, தன்னலமற்ற மனப்பான்மை மற்றும் அமைதியான கண்ணியம் அனைவரின் மனதிலும் அழியாத இடம்பிடித்துள்ளது.
இந்தியப் பிரிவினைக் காலத்தில், சிறுவயதிலேயே அனைத்தையும் பின்னால் விட்டுவிட்டு புதிதாக சுதந்திரம் பெற்ற இந்தியாவிற்கு குடிபெயர்ந்த சிந்தி சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்த அவர், வாழ்க்கையை மீண்டும் புதிதாகத் தொடங்கினார். பின்னர் தனது பிள்ளைகளும் குடும்பத்தினரும் வாழ்க்கையில் முன்னேறி சாதித்ததை கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தார். உண்மையில், எங்களில் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அடைந்துள்ள வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் முக்கிய காரணமாக அவரது அன்பான அரவணைப்பு, அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் அறிவார்ந்த வழிகாட்டுதலே அமைந்துள்ளது. அவையே எங்கள் இல்லத்தின் இதயமும் ஆன்மாவுமாக விளங்கின. எங்கள் மறைந்த தந்தையாருடன் கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்கள் நீண்ட இனிய தம்பதிய வாழ்க்கையை அவர் அனுபவித்தார். அவர்கள் இணைந்து பகிர்ந்துகொண்ட அன்பான நினைவுகள் எங்களுக்கு என்றும் ஆறுதலையும் வலிமையையும் அளித்துக் கொண்டே இருக்கும்.
எங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் அன்பான இரங்கல் செய்திகள், ஆறுதல் வார்த்தைகள் மற்றும் நினைவஞ்சலிகளால் நாங்கள் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளோம். இந்த நேரத்தில் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவோ அல்லது செய்திகளுக்கு உடனடியாக பதிலளிக்கவோ இயலாமல் இருக்கலாம் என்பதை புரிந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
அவரது இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும். பெற்றோர் அல்லது அன்பிற்குரிய மூத்தவரை இழந்த வலியை உணர்ந்த அனைவரும், எங்கள் அமைதியான துக்கத்தை மதித்து, அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு கற்றுத்தந்த சமநிலை, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்று நம்புகிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அஜித்தின் தாயாரது மறைவுக்கு தமிழகத்தின் முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






