ஜூன் 26-ம் தேதி ’கான் சிட்டி’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கான் சிட்டி’. இப்படத்தின் அறிமுக வீடியோ மற்றும் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படம் ஜூன் 26-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.
மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் ஒளிப்பதிவாளராக அரவிந்த் விஸ்வநாதன், எடிட்டராக அருள் மோசஸ், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
கனடாவின் ஹமில்டனில் உள்ள 'வைட் சேப்பல் மெமோரியல் கார்டன்' மயானத்தில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறயைினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 17ஆம் திகதிக்கும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மயானத்திற்குச் சென்ற உறவினர்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் கல்லறைகளில் வைக்கப்பட்டிருந்த மலர்ச்சாடிப் பாத்திரங்கள் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சுமார் 40 மலர்ச்சாடிப் பாத்திரங்கள் வரை அங்கு திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
ஹமில்டன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, கடந்த மே 13ஆம் திகதி ஹமில்டனைச் சேர்ந்த ஜேசன் மெக்கின்டோஷ் என்ற நபரைக் கைது செய்தனர்.
5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்தமை, 5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள திருடப்பட்ட சொத்துக்களை சட்டவிரோதமாக வியாபாரம் செய்தமை , குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தை கைவசம் வைத்திருந்தமை, தடை விதிக்கப்பட்டிருந்த பின்னரும் வாகனத்தை இயக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து திருடப்பட்ட பல மலர்ச்சாடிப் பாத்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவை விரைவில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என ஹமில்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்தத் தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான்.
தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
அடுத்தப் படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதைக் கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகித் திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.
ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தாலும் ஆறடி நிலம்தான்
சொந்தம் கோடி ரூபாய் இருந்தாலும் நெற்றிகாசுதான்
மிஞ்சும் ஆடம்பர மாளிகை இருந்தாலும் விறகு மெத்தைதான் மிச்சம்
அன்போ பாசமோ பொருளோ அள்ளிகொடுங்கள்.
தூத்துக்குடி பூல் பாண்டியன் தாத்தா – மனிதநேயத்தால் தமிழ்நாட்டையே நெகிழவைத்த உண்மை கதை!
இன்றைய உலகத்தில், சொந்த குடும்பத்திற்கே உதவ தயங்கும் மனிதர்கள் இருக்கும் நேரத்தில்…
தனக்கு கிடைத்த ஒவ்வொரு ரூபாயையும் சமூக நலனுக்காக செலவழித்து வருகிறார் தூத்துக்குடியை சேர்ந்த பூல் பாண்டியன் தாத்தா!
தூத்துக்குடி மாவட்டத்தின் சாந்திநகர் பகுதியை சேர்ந்த இந்த முதியவர், வாழ்க்கையில் சாதாரண மனிதர் அல்ல…
கஷ்டம், துன்பம், பசி, ஏமாற்றம் – எல்லாவற்றையும் நேரில் சந்தித்து வாழ்ந்த மனிதர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி மும்பைக்கு சென்றிருந்தார்.
அங்கு கட்டிட வேலை, சிறு தொழில்கள், கூலி வேலை என்று கிடைத்த வேலையை செய்து வாழ்க்கையை நடத்தினார்.
ஆனால் வயது ஆக ஆக உடல்நிலை குறைய தொடங்கியது.
அதற்குள் அவரது மனைவியும் இறந்துவிட்டார்.
வாழ்க்கையில் அவருக்கு துணையாக இருக்க வேண்டிய பிள்ளைகளும் அவரை கைவிட்டதாக கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் குடும்பத்திற்காக உழைத்த மனிதர்…
இறுதியில் தனிமையில் நின்றார்.
வேறு வழியின்றி மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்பிய பூல் பாண்டியன் தாத்தா, பேருந்து நிலையங்கள், கோயில் வாசல்கள் போன்ற இடங்களில் பிச்சை எடுத்து வாழ ஆரம்பித்தார்.
ஆனால் அந்த பிச்சை…
அவரது வயிற்றுக்காக மட்டும் இல்லை!
“நான் அனுபவித்த கஷ்டத்தை வேறு யாரும் அனுபவிக்கக் கூடாது…”
என்ற எண்ணமே அவரை ஒரு சாதாரண மனிதரிலிருந்து மாபெரும் மனிதராக மாற்றியது.
ஆரம்பத்தில் அவர் பிச்சையாக கிடைத்த சிறு தொகைகளை சேமித்து, ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா வாங்கிக் கொடுத்தார்.
சில அரசு பள்ளிகளுக்கு சிறிய உதவிகளும் செய்தார்.
அதன் பிறகு வந்தது கொரோனா காலம்…
நாடு முழுவதும் ஊரடங்கு.
மக்கள் பசி, வேலை இழப்பு, பயம் என்று தவித்துக் கொண்டிருந்த நேரம்.
அந்த நேரத்தில், “இந்த பணம் மக்களுக்கு பயன்பட வேண்டும்” என்று நினைத்த பூல் பாண்டியன் தாத்தா, தானாக சேமித்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்!
ஒரு பிச்சைக்காரர் அரசுக்கு லட்சக்கணக்கில் நன்கொடை வழங்கியது அப்போது தமிழகம் முழுவதும் பேசப்பட்டது.
அதன் பிறகு அவர் நிற்கவே இல்லை…
பள்ளி கட்டிடங்களுக்கு உதவி
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி
பொதுநல நிதிக்கு நன்கொடை
சமூக நலத்திட்டங்களுக்கு பண உதவி
இப்படி தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.1.6 கோடி வரை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது!
சொந்தமாக பெரிய வீடு இல்லை…
விலையுயர்ந்த உடைகள் இல்லை…
ஆனால் ஆயிரம் கோடி பணக்காரர்களுக்கும் இல்லாத மனசு இந்த மனிதருக்கு இருக்கிறது!
சமீபத்தில் தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த பிறகும், அவர் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று பொதுநல நிதிக்காக ரூ.10,000 நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அவரது இந்த செயலை பார்த்து அதிகாரிகளே நெகிழ்ந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசும் அவரை அழைத்து கௌரவித்துள்ளது.
“பணம் இருந்தால்தான் உதவி செய்ய முடியும்” என்று நினைப்பவர்களுக்கு…
“மனசு இருந்தால் போதும்” என்று தனது வாழ்க்கையால் பதில் சொல்லியுள்ளார் பூல் பாண்டியன் தாத்தா!
இப்படிப்பட்ட மனிதர்களுக்கு நாம் தர வேண்டியது மரியாதை மட்டுமல்ல…
இந்த மனிதநேயத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும்!
வறுமை காரணமாய்
பெற்ற பிள்ளைதனை
வசதியாய் வாழும் பிள்ளையில்லா தமக்கைக்கு
சாகும் வரை ரகசியம் காப்பதாய்
பால்குடி மறக்கும் முன்பே சத்தியம் செய்து
தத்துக் கொடுத்தாள் தங்கை
பசியில்லா வயிறும்
படிப்பும் அறிவும்
பிள்ளைக்கு கிடைத்தால் போதுமென்று
ஊரை விட்டே புலம்பெயர்ந்தாள்
ஆண்டுகள் உருண்டோடியது.
மண்வாசனை மனதோடு ஏக்கம் ஏற்படுத்த
கோயில் திருவிழா சாக்கானது
காலத்தின் பெருங்காற்றில்
அடையாளம் தெரியாமல் மாறிப்போனவள்
திருவிழாக்கூட்டத்தின் பரபரப்பினூடே
ஓரமாய் நின்று கடந்தகாலத்து பல்சக்கரத்தின் பிடியில் வலிய தன்னை செருகிக்கொண்டாள்
வாடிவாசல் திறந்ததும் சீரும் காளையென
கூட்டத்தை கிழித்துக்கொண்டு
எத்தனை முயன்றாலும் மறைக்க இயலா தன் சாயலோடு
வந்த
இளைஞனை பார்த்ததும்
உடல் குலுங்க நடப்பிற்கு வந்தாள்
இரு புருவத்தின் நடுவிலும் தன்னைப்போலவே
சின்னதாய் ஒரு வெட்டு
அப்பனைப்போலவே லேசாய் செம்பட்டை படிந்த தலைமுடி
முரட்டுகைகளின் ரோமங்கள் கூட அப்பனை உரித்தாற் போன்று
தன்னை நோக்கி ஏன் வேகமாய் வருகிறான்?
படபடத்துக்கொண்டாள்
வியர்த்துப் போனது ஒரு நொடியில்
தெரிந்து போனதா நான் தான் அம்மா என்று?
அம்மா என்று அழைக்கும் போது என்ன எதிர்வினை ஆற்றுவது?
செய்த சத்தியம் என்னவாகும்?
எதற்காய் பாழாய் போன திருவிழாவிற்கு வந்தேனோ?
மனம் அடுக்கடுக்காய் கேட்டுக்கொண்டது
நினைத்தது போலவே
பெருங்குரலெடுத்து
‘அம்மா’ அம்மா எனக் கத்தினான்
எந்த விளிக்காய் இத்தனை இரவுகள் தூங்காமல் தவித்தாளோ
இப்போது அது செவிப்பறையில் வந்து மோதுகிறது
எனைப்பெத்தாரே!
என்குலசாமி என உரக்கக் குரலெடுத்து அழுது ஆரத் தழுவ எத்தனிக்கையில்
“அம்மா… கூட்டம் அதிகமா இருக்கு…அங்கேயே இரு
நான் வரேன்" என எங்கோ எட்டி வந்த தன் அக்காவைப்பார்த்து அவன் சொன்ன நொடியில்
தத்து கொடுத்த நாளைவிடவும்
ஏகமாய் நொறுங்கிப்போனாள்
-- சியாமளா ரமேஷ்பாபு
நமக்கு வரக் கூடாது என்ற எண்ணத்தைவிட...
நம்மால் அடுத்தவருக்கு (கஸ்டம்) வரக் கூடாது என்ற எண்ணம் மேலோங்கும் போதுதான்..
இங்குள்ள நிலைமைகள் அனைத்தும் மாறும்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: புது திட்டம் தீட்டுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். தாயாரின் மருத்துவச் செலவு குறையும். வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும். பொறுப்புகள் கூடும்.
ரிஷபம்: வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் நீங்கும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்கவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
மிதுனம்: பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். பூர்வீக சொத்துப்பிரச்சினையை பேசித் தீர்ப்பீர். மூத்த சகோதரர் உதவுவார். வியா பாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
கடகம்: முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். குடும்பத்தில் அனுசரித்துப் போகவும். வியாபாரம், அலுவலகத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.
சிம்மம்: பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். இங்கிதமாக பேசி சுற்றியிருப்பவர்களை கவருவீர். பிரபலங்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி கிட்டும்.
கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
துலாம்: குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். தந்தை வழியில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். வியாபாரம் சூடு பிடித்து, ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும். உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர்.
விருச்சிகம்: எதிர்பார்த்தபடி சில பணிகளை முடிப்பீர். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்.
தனுசு: வீட்டில் குழப்பம் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் இழுபறியாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு வியாபாரத்தில் சிக்கல் வரலாம். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு முக்கிய பணிகளை முடிப்பீர்கள். சொந்த ஊரிலிருந்து நற்செய்திகள் வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். பொறுப்புகள் கூடும்.
கும்பம்: விலையுயர்ந்த அலங்காரப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டி விலகும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரவு தருவார்.
மீனம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்களை கண்டறிவீர். திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த பனிப்போர் விலகும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
ஸ்ரீ பராபவ வருடம் வைகாசி மாதம் 7 ஆம் தேதி வியாழக்கிழமை 21.5.2026.
இன்று பிற்பகல் 02.31 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி
இன்று காலை 09.50 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.
இன்று அதிகாலை 03.34 வரை பவம். பின்னர் பிற்பகல் 02.31 வரை பாலவம். பின்பு கௌலவம்.
இன்று அதிகாலை 05.52 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 10.30முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை










