நிலச்சரிவால் குளிர்சாதன பெட்டியில் ஒளிந்து கொண்ட சிறுவன்
பிலிப்பைன்சின் லெய்டு மாகாணத்தை தாக்கிய மெகி புயலால் கனமழையும், வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டது. ஏராளமான வீடுகள், சாலைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
பேபே நகரில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டபோது அந்த பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுவனான சி.ஜே. ஜாஸ்மி குளிர்சாதன பெட்டிக்குள் சென்று ஒளிந்துகொண்டான்.
பின்னர் அங்கு நடைபெற்ற மீட்பு பணியின் போது நதிக்கரை அருகே குளிர்சாதன பெட்டியில் சிறுவன் இருப்பதை மீட்பு பணி வீரர்கள் கண்டுபிடித்தனர்.
சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக குளிர்சாதன பெட்டிக்குள் இருந்த சிறுவன் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். சிறுவன் மீட்பு படையினரிடம் முதலில் பசிக்கிறது என்று கூறியுள்ளான். சிறுவனின் காலில் அடிபட்டிருந்தது.
சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
தற்போது சிறுவன் பத்திரமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவில் சிறுவனின் தாய் மற்றும் சகோதரனை காணவில்லை. சிறுவனின் தந்தை நிலச்சரிவில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.