கொரோனா திரிபால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட பெண்
ஸ்பெயின் நாட்டில் 31 வயதான பெண்ணிற்கு இருபது நாட்களுக்குள் இரண்டு முறை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே நபருக்கு அடுத்தடுத்து இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இதுவரை அறியப்பட்ட குறைந்தபட்ச கால இடைவெளி இதுவே என்று ஸ்பெயினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுகாதார பணியாளரான அந்த பெண்ணுக்கு கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் டெல்டா திரிபாலும், ஜனவரியில் ஒமிக்ரான் திரிபாலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் மூலம், ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பது உறுதியாவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்பெண்ணுக்கு முதல் முறையாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டபோது எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. ஆனால், சுமார் மூன்று வாரங்களுக்கு பிறகு அவருக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டதால் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே அவர் வெவ்வேறுபட்ட கொரோனா திரிபால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டது தெரியவந்தது.