இலங்கையில் கடைகள் மூடல், போக்குவரத்து நிறுத்தம்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசும் பதவி விலக கோரி தலைநகர் கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
ரம்புக்கனை துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த போராட்டக்காரர்கள் முறையான நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். சாலைகளில் டயர்களை தீயிட்டு எரித்தும், ரயில்வே தண்டவாளத்தில் மரக்கட்டைகளை போட்டு தடை ஏற்படுத்தியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல இடங்களில் பெண்கள் ஒப்பாரி வைத்து அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ராஜபக்சேவின் உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. போராட்டத்திற்கு ஆதரவாக கடைகள் மூடப்பட்டன, போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.