சபர்மதி ஆசிரமத்திற்கு வந்தது பெரிய பாக்கியம் – போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்தில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையம் வந்த அவரை குஜராத் முதலமைச்சர் புபேந்திர பட்டேல், ஆளுநர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அகமதாபாத்தில் உள்ள காந்தி ஆசிரமத்திற்கு போரிஸ் ஜான்சன் சென்றார். ஆசிரமத்தை பார்வையிட்ட அவர், அங்குள்ள ராட்டினத்தில் நூல் நூற்றார். ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் கையெழுத்திட்டார். அகமதாபாத்தில் உள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை அவர் சந்தித்தார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியை அகமதாபாத்தில் சந்தித்து பேசினார். இன்று மாலை டெல்லி செல்லும் போரிஸ் ஜான்சன் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக் பகுதி பாதுகாப்பு உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.