ரெயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழுக்கள்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு வந்தே பாரத் ரெயில் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25-ந்தேதி இந்த ரெயிலை திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் மீது நேற்று முன்தினம் சில மர்மநபர்கள் கல்வீசினர். இதனால் ரெயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
இந்த நிலையில் நேற்று இந்த ரெயிலின் இ-1 பெட்டியில் பயணம் செய்த பயணிகளுக்கு பரோட்டா வழங்கப்பட்டது. அதில் ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்தது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பயணி பரோட்டா பார்சலை அப்படியே மூடி வைத்துவிட்டார்.
பின்னர் அவர் காசர்கோடு சென்றடைந்ததும், இதுபற்றி ரெயில் நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார். அவர்கள் இந்த புகார் குறித்து பாலக்காடு ரெயில்வே கோட்டத்திற்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
ரெயிலில் வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்ததை ரெயிலில் பயணம் செய்த சில பயணிகள் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோவில் பரோட்டா பார்சலை பயணி ஒருவர் கையில் வைத்திருப்பதும், பரோட்டாவில் புழு இருப்பதும் தெரிகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.