இலங்கை துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்கா, கனடா நாடுகள் கண்டனம்
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றை வாங்க முடியவில்லை. அதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.
பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது. மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே ஒருவாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. அதேபோல், பல இடங்களில் தெருமுனை போராட்டங்களும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இலங்கையின் கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். பலர் காயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது . அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இலங்கை அதிபர் பதவி விலகக் கோரி 1 வாரம் வேலை நிறுத்தம் செய்வதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன .