சாலையின் நடுவே நடனமாடிய பெண் மீது வழக்கு
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரின் ராசோமா சதுக்கம் எப்போதும் பரபரப்பாக இயங்கும் சாலையாகும். அங்கு சிக்னல் போட்ட உடன் ஒரு இளம் பெண் திடீரென்று தோன்றி நடுரோட்டில் நடனமாடினார். அந்த பெண்ணுடன் இருந்த நபர் ஒருவர், அந்த பெண்ணின் நடனத்தை வீடியோவாக எடுத்தார்.
விளக்குகள் மீண்டும் பச்சை நிறமாக மாறும் வரை சிக்னலில்அந்த பெண் நடனமாடினார். மேலும் தனது நடனம் மூலம் முகக்கவசம் அணியுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இவரின் நடனம் வாகன ஓட்டிகளை பெரிதும் கவர்ந்த நிலையில் அவர்களும் வீடியோ எடுத்தனர்.
இந்த வீடியோ போக்குவரத்தை கட்டுப்படுத்த மற்றும் வழிகாட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றால் இந்தூர் காவல்துறையால் ஏற்பாடு செய்யபட்ட பிரசாரம் ஆகும். எனினும் இந்த வீடியோ வைரலான நிலையில் போக்குவரத்து விதிமீறலுக்கான நோட்டீஸை அதிகாரிகள் அந்த பெண்ணுக்கு வழங்கியுள்ளனர்.
வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்காத பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை மட்டுமே செய்யுமாறு போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த பெண் ஸ்ரேயா கல்ரா என்ற மாடல் அழகி என்பது தெரியவந்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக தன் மீது எழுந்துள்ள குற்றத்தை முழுவதுமாக மறுத்துள்ளார்.
பொதுமக்களிடையே முககவசம் அணிவது மற்றும் சிவப்பு விளக்கு ஒளிர்ந்தால் வாகனங்களை நிறுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் இதனை செய்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
இந்த வீடியோவா தற்போது டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களில் மட்டுமின்றி செய்தி சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்படுவதால் எண்ணற்ற விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.