![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
போலி கடவுச் சீட்டு - சென்னை விமான நிலையத்தில் சிக்கிய இலங்கை பயணிகள்
போலியான கடவுச் சீட்டுக்களை பயன்படுத்தி இலங்கை வர முயற்சித்த தம்பதியினர், சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இருவரும், சென்னை விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று கொழும்பு நோக்கி வரவிருந்ந விமானத்தில் வைத்து குறித்த பயணிகளின் பயண ஆவணங்களை குடிவரவு அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் பெரம்பலூரை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் மனைவி ஹனிஷா ஆகியோரின் கடவுச்சீட்டுக்களை சோதனை செய்தபோது, அவை போலியானவை என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணையின் போது, இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த சில ஆண்டுகளாக பெரம்பலூரில் தங்கி, நிவாரண அட்டைகள் மற்றும் பிற இந்திய அடையாள அட்டைகளை வைத்திருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சமீபத்தில் அவர்கள் இலங்கை செல்ல முடிவு செய்து பெரம்பலூர் முகவரியில் இந்த போலி கடவுச் சீட்டுக்களை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் குடிவரவு அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து , மத்திய குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் சென்னை விமான நிலையத்திற்கு சென்று, விசாரணை நடத்தி சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு, அவர்களை அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.