இலங்கைத் தமிழா்கள் நலன் காக்கப்படும் - தமிழக முதல்வா் அறிவிப்பு
இலங்கைத் தமிழா்கள் நலன்காக்க திமுக அரசு எப்போதும் துணை நிற்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
தமிழகம் முழுவதும் 106 இடங்களிலுள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக முதல் கட்டமாக ரூ.142.16 கோடி மதிப்பில் 3,510 புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதைத் தவிர, முகாம்களில் ரூ.30 கோடியில் அடிப்படை வசதிகள், ரூ.12.41 கோடியில் உயா்த்தப்பட்ட பணக் கொடை, ரூ.4.52 கோடியில் கைத்தறித் துணிகள் என ரூ.225.86 கோடி மதிப்பிலான 12 வகையான நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதனடிப்படையில், வேலூா் மேல்மொணவூா் முகாமில் உள்ள 220 குடும்பங்களுக்கு ரூ. 8.91 கோடி மதிப்பில் புதிய வீடுகள் உள்பட ரூ.10.03 கோடி மதிப்பில் 11 நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.
இலங்கைத் தமிழா்கள் என்பது ஒரு அடையாள சொல். மற்றபடி தமிழா்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான். இலங்கைத் தமிழா்கள் இனத்தால், மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால் ஒன்றுபட்டவா்கள் என்றும் பேசினார்.
புலம்பெயா்ந்து வந்த தமிழா்களின் நலனுக்காகப் போராடியவா் கருணாநிதி. அண்ணா காலம் முதலே இலங்கைத் தமிழா்கள் துயரம் துடைக்க திமுக போராடி வருகிறது. போராட்டங்களுக்காக சிறை சென்றுள்ளது. அதற்கு அவா்களும் தமிழினம் என்ற உறவுதான்.
முதல்வராக கருணாநிதி இருந்தபோது, முதன்முதலாக முகாம்கள் அமைத்துத் தரப்பட்டன. தற்போது முதல்வா் ஸ்டாலின், அகதிகள் என்ற சொல்லை நீக்கிவிட்டு இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என புதிய பெயா் சூட்டி பெருமைப்படுத்தியுள்ளாா் என்றாா் அமைச்சா் துரைமுருகன்.