
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் நியமனம்
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நாளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்
கண்டி மேல் நீதிபதி சுமுது பிரேமச்சந்திரா, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கே.பிரியந்த பேர்னாண்டோ மற்றும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகிய மூவருமே இன்று காலை பதவியேற்கின்றனர்.
யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நீதிவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதியாக அன்னலிங்கம் பிரேமசங்கர் சுமார் 28 ஆண்டுகள் நீதிச் சேவையில் கடமையாற்றியுள்ளார்.
1967ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி யாழ்ப்பாணம், வடமராட்சி, துன்னாலையில் அன்னலிங்கம் (முன்னாள் அத்தியாவசிய சேவைகள் உதவி ஆணையாளர்) மகாலக்ஷ்மி தம்பதியினருக்கு மகனாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர் பிறந்தார்.
துன்னாலை அமெரிக்க மிசன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்ந்து சட்டத்துறையில் கல்வி கற்று சட்டத்தரணியானார்.
1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நீதித்துறை அலுவலராக நீதிபதி நியமனம் பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை, சாவக்கச்சேரி மற்றும் கிளிநொச்சி நீதிமன்றங்களில் ஒரே தடவையில் நீதிவானாகவும் மல்லாகம், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் என யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனைத்து நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாகக் கடமையாற்றியுள்ளார்.
சுமார் 14 ஆண்டுகள் நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த அன்னலிங்கம் பிரேமசங்கள் 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்ற ஆணையாளராக (மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நாடாளுமன்றினால் அதிகரிக்க முன்னர்) பின்னர் 2013ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி தொடக்கம் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற ஆணையாளராக பதவி வகித்ததுடன் 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் திகதி முதல் மேல் நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு என மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் சுமார் 13 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
இந்த நிலையில் 27 ஆண்டுகள் நீதிச் சேவையில் முதல் நிலை நீதிபதியாகத் தொடர்ந்த நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், தலைமை நீதியரசர் முறுது பெர்னான்டோ தலைமையிலான நீதிச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையுடனும் சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலுடனும் ஜனாதிபதியினால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது