
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து க்ரிஷ் சில்வர்வுட் விலகல்
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து க்ரிஷ் சில்வர்வுட் விலகியுள்ளார்.
இதற்கான கடிதத்தை அவர் சமர்ப்பித்துள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட், அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
'சர்வதேச அணி ஒன்றிற்கான பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றுவது என்பது நீண்டகாலம் குடும்பத்தாரைப் பிரிந்திருக்கச் செய்யும்.
எனவே எனது குடும்பத்துடன் நடத்திய நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானத்தை கனத்த இதயத்துடன் எடுத்தேன்' என க்ரிஷ் சில்வர்வுட் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்குப் பயிற்றுவிக்கக் கிடைத்தமையை தாம் பெரிய கௌரவமாகக் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்பதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராகச் செயற்பட்டு வந்த மஹேல ஜெயவர்தன நேற்று பதவி விலகி இருந்த நிலையில், க்ரிஷ் சில்வர்வுட் இன்று (27) பதவி விலகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000