நாட்டின் ஸ்திரத்தன்மை சட்டத்தை அமுல்படுத்துவதிலேயே தங்கியுள்ளது - ஜனாதிபதி ரணில் சுட்டிக்காட்டு
நாடாளுமன்றம் கலைக்கப்படும் என சிலர் கூறுவதால், பங்குச் சந்தை வீழ்ச்சியடைகிறது. ஆனால் அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் தெரிவித்ததை அடுத்து, மீண்டும் பழையை நிலைமைக்கு வருகிறது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 'ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை சட்டத்தை அமுல்படுத்துவதில் தங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை நேற்று (15) காலை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி -
'ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை சட்டத்தை அமுல்படுத்துவதில் தங்கியுள்ளது. அத்துடன் ஒரு நாடு என்ற சர்வதேச அங்கீகாரம் சட்ட கட்டமைப்பின் செயற்பாட்டில் அடங்கியுள்ளது .
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. அதனடிப்படையில் தெற்காசியாவில் புதிய சட்டங்களைச் செயற்படுத்தும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
அத்துடன், புதிய அரசியல் கலாச்சாரத்தை நாட்டில் உருவாக்கி வருகிறோம். அதனால் நாட்டில் தற்போது புதிய பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, தெற்காசியாவின் புதிய சட்டங்கள் இப்போது இலங்கையில் உள்ளன. இதன் ஊடாக அரசியலில் மாற்றம் ஏற்படும்.
இதுவரை ஊழல் எதிர்ப்பு என்பது அரசியல் முழக்கமாக மாறியிருந்தது. ஆட்சிக்கு வந்து இரண்டு மாதத்தில் திருடர்களைப் பிடிப்போம் என்று கூறினாலும் அது நடக்காது.
மேலும், அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் திருடர்களை பாதுகாக்க வந்ததாக இந்த அரசாங்கம் மீது குற்றஞ்சுமத்தினாலும், திருடர்களைப் பிடிக்க இந்த அரசாங்கமே சட்டம் கொண்டு வந்துள்ளது.‘ என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00