
கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டிய விவகாரம் - சாவகச்சேரி பிரதேச சபையினர் நாசகார வேலை என வியாபாரிகள் விசனம்
கொடிகாமம் சந்தைக்கு அருகாமையில் உள்ள மரத்தை வெட்டியதால் வியாபாரிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நேற்றுமுன்தினம் இரவு வந்த சாவகச்சேரி பிரதேச சபையினர் இந்த நாசகார வேலையை செய்ததாக வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
தற்போது வெப்பமானது மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. ஆகையால் மரங்கள் நிற்பதன் மூலம்தான் ஓரளவேனும் வெப்பத்தின் தாக்கம் குறைவாக உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் கருத்தையும் மீறி மரத்தை வெட்டியதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
சந்தையில் உள்ள மலசலகூடங்களும் பயன்படுத்த முடியாமல் மிகவும் அசுத்தமான முறையில் காணப்படுகின்றதாகவும் அவற்றினை சாவகச்சேரி பிரதேச சபையினர் சுத்தம் செய்வதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் சந்தையில் சேருகின்ற கழிவுப் பொருட்களை உரிய முறையில் பிரதேச சபையினர் அகற்றுவதில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
மக்களுக்கு சரியான முறையில் சேவைகளை வழங்காத உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் திரு.வேதநாயகன் கூறியுள்ளார். எமது இந்த பிரச்சினைக்கு அவர் எடுக்கப்போகின்ற நடவடிக்கை என்ன என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இல்லாத நிலையில் இவ்வாறான விரும்பத்தகாத விடயங்கள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000