![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் – நாளை வலுவடைந்து சூறாவளியாக உருவாகலாம் என இலங்கை, இந்திய வானிலை ஆய்வு மையங்கள் எதிர்வுகூறல்
தற்போது வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் உருவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் நேற்றிரவு தாழமுக்க நிலையொன்று உருவாகியுள்ளது.
இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைந்து நாளை ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து, எதிர்வரும் 25ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சூறாவளிக்கு Oman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Remal (Pronounce as Re-Mal) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது எதிர்வரும் 25ஆம் திகதியளவில் வடக்கு ஒரிசா அல்லது மேற்கு வங்கம் பகுதியினூடாக (பாலச்சூர் - கொல்கத்தா) ஊடறுத்துச் செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, இலங்கையின் தென்மேற்கு கடல் பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு அரேபிய கடற் பிராந்தியத்தில் காற்றானது மணிக்கு 60 - 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், பலத்த மழையும் கடற் கொந்தளிப்பும் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீனவர் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் சிவப்பு நிறம் தீட்டப்பட்ட பிராந்தயங்களில் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் எனவும், திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்பை அவதானமாக செவிமடுத்து செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
000