இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை - கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு
தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் 77வது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் இராணுவ சிப்பாய்களின் எண்ணிக்கையை 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டு சுதந்திர தின அணிவகுப்பில் எந்த கவச வாகனங்களும் இணைத்துக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் 77 ஆவது சுதந்திர தின விழா, நாட்டின் புதிய யுகத்தை ஆரம்பிக்கின்ற சுதந்திர விழாவாக இருக்கும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் எ.எச்.எம்.எச். அபயரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், அத்தியாவசியமான செயற்பாடுகளுக்கு மாத்திரம் வரையறுத்து, மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைத்து, இம்முறை சுதந்திரதின விழா இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் சுதந்திர தின வைபவத்தைப் பார்ப்பதற்கு அதிகமாக இட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000