நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்காவிடின் அரசுக்கு எதிராக விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம் - தேசிய விவசாய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை
நெல்லுக்கான உத்தரவாத விலையை விரைவாக நிர்ணயிக்காவிடின் அரசாங்கத்துக்கு எதிராக இலட்சக்கணக்கான விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம் என தேசிய விவசாய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிந்து பாகொட தெரிவித்துள்ளார்
மாத்தறையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும், நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்.
அரிசி மாபியாக்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை கடந்த ஆண்டு தோளில் சுமந்துக் கொண்டு திரிந்த விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இன்று விவசாயிகளுக்கு எதிராக செயற்படுகிறார்.
விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளை குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இன்று விவசாயிகளின் கோரிக்கைகளை அலட்சியப்படுவதையிட்டு வெட்கமடைகிறோம்.
விவசாயிகளுக்கு வழங்குவதாக குறிப்பிட்ட உர நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் அழிவு விவசாயத்துறையில் இருந்தே ஆரம்பமானது.
நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் வெகுவிரைவில் தீர்மானிக்க வேண்டும். இல்லையேல் அரசாங்கத்துக்கு எதிராக பல இலட்ச விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம். என்றார்.
இந்நிலையில் நெல்லுக்கான உத்தரவாத விலை இந்த வாரம் அறிவிக்கப்படும் என வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000