
முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கு படிப்பினையாக அமைய வேண்டும் - ஸ்ரீகாந்
முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கான படிப்பினையாக அமைய வேண்டும் என்று இன்று(18.05.2025) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், உப்பு மாபியாவிற்கும் முடிவு கட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், "முள்ளிவாய்க்கால் அவலம் நினைவு கூரப்பட்டு வருகின்றது. 2009 ஆண்டு இதே காலப் பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்கால் அவலம் காரணமாக ஆயிரக்கணக்கான எமது மக்கள் உயிரிழந்திருந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூருவதும் அவர்களுக்கான பிரார்த்னைகளை முன்னனெடுப்பதும் யாராலும் விமர்சிக்கப்பட முடியாதது.
அதேபோன்று அந்த பேரவலம் தொடர்பாக அடுத்த சந்ததிக்கும் கடத்தப்பட வேண்டும் என்பதற்காக முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்வேறு இடங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகள், எமது இனத்தின் எதிர்காலத்திற்கான படிப்பினைகளாக அமைய வேண்டும்.
இவ்வாறான அவலங்கள் எவ்வாறு இடம்பெற்றன? இந்த அவலத்தை தடுப்பதற்கான முயற்சிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன? முள்ளிவாய்க்கால் பேரவலத்தை எம்மால் தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா? போன்ற கேள்விகளுக்கு சுயவிமர்சன அடிப்படையில், பதில்களை கண்டறிந்து அவற்றையும் எமது அடுத்த சந்திக்கு கடத்துவதன் மூலம், எதிர்காலத்தில் எமது மக்கள் இந்த மண்ணில் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை உறுதிப்படுத்த முடியும்.
ஆனால், முள்ளிவாய்க்கால் அவலம் போன்ற நிகழ்வுகள், சில தரப்புக்களினால் தங்களின் குறுகிய அரசயல் நலன்களுக்கும் சுய விளம்பரத்திற்கும் பயன்படுத்தப்படுவது வேதனையான விடயம். இதனை மக்கள் புரிந்து கொண்டு இவ்வாறான நிகழ்வுகளை அறிவுசார்ந்து சிந்தித்து புத்திசாதுர்யமாக கையாள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அதேபோன்று, யுத்தம் நிறைவடைந்த சூழலில் ஆனையிறவு உப்பளத்தினை மீளச் செயற்படுத்துவதற்கான முயற்சிகளை அப்போது பாரம்பரிய சிறுகைத்தொழில் முயற்சி அமைச்சராக இருந்த எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்திருந்தார். அவரின் முயற்சியினால் வடக்கின் வசந்தம் செயற்றிட்டத்தின் ஊடாக 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டு வேலைகள ஆரம்பிக்கப்பட்டிருந்தன. எனினும், 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரே ஆனையிறவில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பு, மாந்தை போன்ற பிரதேசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பதனிடப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டு வநதது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பை ஆனையிறவிலேயே பதனிடுவதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வேலைகள் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எனினும், புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், அதுவரையில் ஆனையிறவில் பதனிடல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை கடந்த சில தினங்களாக ஆனையிறவு உப்பு உற்பத்தியில் ஈடுபடும் பணியாளர்கள், தமக்கு தொடர்ச்சியாக தொழில் வழங்கப்படுவதில்லை எனவும், அடிப்படை உரிமைகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை எனவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆகவே, உப்பை பதனிடுவதற்காக புதிதாக பொருத்தப்பட்ட பதனிடும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டமை, வாரம் முழுவதும் உப்பு உற்பத்தியில் ஈடுவதற்கான சூழல் இருக்கின்ற போதிலும், பணியாளர்களின் வேலை நாட்கள் மட்டுப்படுத்தல் போன்ற செயற்பாடுகளின் பின்னணியில் உப்பு மாபியா செயற்படுகின்றதோ என்ற பாரிய சந்தேகம் உருவிகியுள்ள நிலையில், அவை தொடர்பாக உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்" என்று தெரிவித்துள்ளார்