
மலையக மக்களுக்கு காணி உரிமம் வேண்டும் - இலங்கை எல்லைக்குள் சென்று மீன் பிடிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று - இந்திய சட்டத்தரணி சிவஞானசம்பந்தம்!
இலங்கை மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இன் நாட்டின் இறைமை மிக்க மக்களாக வாழ்வதற்கு அனுர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பாரத தேசத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் காந்திய சமதர்ம இயக்கத்தின் (இந்தியா) அரசியல் ஆலோசகர் சட்டத்தரணி சிவஞானசம்பந்தம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் பல்வேறு இடர்பாடுகளுடன் வாழும் மலையக மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை காணுவது தொடர்பில் அக்கறை கொண்டு தாம் இங்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அப்பிரச்சினைகளை இனங்கண்டு வெளிக்கொணரும் வகையிலேயே யாழ் ஊடக அமையத்தில் குறித்த சந்திப்பை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் -
மலையக மக்கள் இலங்கையின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் பெரும் சக்தியாக இருக்கின்றபோதும், அவர்களின் வழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் அரசுகள் எதனையும் செய்வதில்லை.
இதனால் நாளந்த வருமானத்தை பெறுவதில் கூட பெரும் அசௌகரியங்களை சந்திக்க நேரிடுகின்றது. இந்த நிலையை அரசு மாற்றி அமைக்க வேண்டும். இந்த கோரிக்கையை இந்திய தரப்பினருக்கும் முன்வைக்க இருக்கின்றேன்.
மலையக மக்களுக்கு அரசினால் இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கபடுகின்றன. ஆனால் அவ்வீடுகளுக்கான காணி உரிமங்கள் அவர்களுக்கு சொந்தமானாதாக இல்லை.
இருப்பிடங்களுக்கான தனியான முகவரிகள் கூட பலருக்கு இல்லை.
அதுமட்டுமல்லாது வறுமையின் கரணமாக கல்வியைக் கூட இடை நடுவில் கைவிடும் நிலையில் வாழ்கின்றனர்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பட வேண்டியது அவசியம். இந்தப் பிரச்சினைக்கு அனுர தலைமையிலான இன்றையாரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம்.
இதேனேரம் இந்திய கடற்றொழிலாளர் இலங்கை கடற்ரப்பில் நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடையம். இலங்கை தொழிலாளர்கள் நிம்மதியாக வாழ நிரந்தர ஏற்பாடுகள் அவசியம். இது தொடர்பில் தமிழக அரசுடனும் கோரிக்கைவிட இருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.