
பகுதி நேர ஆன்லைன் வேலை என முதலீடு செய்து ஏமாந்தவர்கள்
பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து வில்லியனுார் நபர் மோசடி கும்பலிடம் ரூ.11.42 லட்சம் இழந்துள்ளார்.வில்லியனுாரை சேர்ந்தவர் இஸ்மத் நாச்சியார். இவரை தொடர்பு கொண்ட மர்மநபர், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.
அதைநம்பிய, இஸ்மத் பல்வேறு தவணைகளாக 11 லட்சத்து 42 ஆயிரத்து 736 முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடித்துள்ளார். அதன் மூலம் வந்த லாபப் பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன் பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரிய வந்தது.
லாஸ்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் என்பவரை தொடர்பு கொண்ட மர்மநபர் வங்கி அதிகாரி போல் பேசி, வங்கி கணக்கிற்கான KYC கே.ஓய்.சி.யை புதுப்பிக்கும்படி கூறியுள்ளார். அதற்கான லிங்க் ஒன்றையும் சீனிவாசனுக்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, சீனிவாசன் அந்த லிங்கை பதிவிறக்கம் செய்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்து 6000 ரூபாயை மோசடி கும்பல் எடுத்து ஏமாற்றியுள்ளது.
இதேபோல், முருங்கப்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி 72 ஆயிரத்து 800, கோரிமேட்டைச் சேர்ந்த ஜெகஜீவன் 1 லட்சத்து 63 ஆயிரத்து 300, முத்தியால்பேட்டைச் சேர்ந்த சரவணகுமார் 5 ஆயிரம், பெரியார் நகரைச் சேர்ந்த ஸ்ரீநிவேதா 25 ஆயிரம், கோரிமேட்டை சேர்ந்த இருதயராஜ் சார்லஸ் 19 ஆயிரத்து 700, அரியாங்குப்பத்தை சேர்ந்த முத்து மணிக்கம் 3 ஆயிரம் என மொத்தம் 8 பேர் மோசடி கும்பலிடம் 19 லட்சத்து 37 ஆயிரத்து 536 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.