
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தார். இந்தப் படத்தில் நடிக்கவும் செய்திருந்தார். ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் என்ற படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து காவல் பூனைகள், உளவாளி போன்ற படங்களை இயக்கினார். இந்தப் படங்களை தயாரிக்கவும் செய்திருந்தார். அதுமட்டுமின்றி இந்தப் படங்களில் நடித்துள்ளார்.
சினிமா பைனான்சியர், விநியோகஸ்தர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முக கலைஞரான கலைப்புலி ஜி சேகரன், விநியோகஸ்தரான தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு கலைப்புலி எஸ் தாணு உடன் இணைந்து கலைப்புலி பிலிம்ஸின் பங்குதாரராக இருந்தார்.
ஆரம்பத்தில் எதிர்மறை ரோலில் நடித்த சேகரன், ஜமீன் கோட்டை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர், மீண்டும் விநியோகஸ்தராக திரும்பினார். 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக இருந்தார். இப்படி பன்முக கலைஞராக திகழ்ந்த ஜி சேகரன் இன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 73. ஜி சேகரனின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக சென்னை ராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.