
எட்டு வருடங்களின் பின்னர் இலங்கையின் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு - புவியியல் துறை பேராசிரியர் திலக் விஜயதுங்க பண்டார சுட்டிக்காட்டு
எட்டு வருடங்களின் பின்னர் இந்த ஆண்டு இலங்கையின் வெப்பநிலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் திலக் விஜயதுங்க பண்டார தெரிவித்துள்ளார்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த வாரம் சராசரியாக 39 பாகை செல்சியஸாக வெப்பநிலை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கையில் அதிக வெப்பநிலை பதிவானது. இதேநேரம் இலங்கையின் சராசரி வெப்பநிலை 27 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே பொதுமக்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என பேராசிரியர் திலக் விஜயதுங்க பண்டார அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000