
இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது மறைந்த ஈழத் தமிழர் சாந்தனின் உடல்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, சமீபத்தில் விடுதலையான சாந்தன் திருச்சி முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணமடைந்தார்.இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் அவரது உடல் இன்றையதினம் இலங்கைக் கொண்டு செல்லப்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 32 ஆண்டுகள் சாந்தன் சிறைச்சாலையில் இருந்தவர். சிறையிலிருந்து விடுதலையான நிலையில், உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன், கடந்த பெப்ரவரி 28ம் திகதி காலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
சாந்தனுடைய கடைசி விருப்பம் அவரது தாயைப் பார்க்க வேண்டும் என்பதுதான். ஆனால், இலங்கை திரும்ப முடியாததால், அது நிறைவேறாமலேயே அவர் மரணமடைந்தார். இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்றிரவு 11 மணியளவில் அவரது உடல் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது.
இந்திய தூதரகத்தின் மூலம், இலங்கை கொண்டு செல்ல அனுமதி கொடுத்தது. இதனையடுத்து இலங்கை தூதரகம் தன்னுடைய அனுமதியை தராமல் சுமார் ஒன்றரை மணித்தியாலம் சரக்கு தளவாளம் வெளிப்பகுதியில் சாந்தன் அவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
இலங்கை தூதரகம் அனுமதி அளித்த பிறகு சாந்தன் அவர்களின் உடல் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு இலங்கை கொண்டு செல்லப்பட்டது.
முன்னதாக, சாந்தனின் உடலுக்கு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். இலங்கையில் சாந்தன் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.