
சர்வதேச நிதி உதவிகளை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சியில் அரசாங்கம்
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும்,உணவுப்பஞ்சத்தை தவிர்க்கும் விதமாக பெரும்போகம் மற்றும் சிறுபோக விளைச்சலுக்கான உரத்தை பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் சர்வதேச தரப்புடன் தீவிரமாக கலந்துயாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சர்வதேச தரப்புடன் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தைகளில் பல்வேறு இணக்கப்பாடுகளை எட்டியேனும் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் அமைச்சரவைக்கு அறிவுரை வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இறுதியாக கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதும், நாட்டின் நெருக்கடி நிலைமைகள் குறித்து பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளதுடன், நெருக்கடியை தவிர்க்க பல்வேறு மாற்று வேலைத்திட்டங்களை கையாள வேண்டியுள்ளதாவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகளின் போதும் இலங்கையின் சார்பில் முன்வைக்கவுள்ள பரந்துபட்ட வேலைத்திட்டம் குறித்தும், பொது இணக்கப்பாடுகள் குறித்தும் உடனடியாக தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளதாகவும், தொழிநுட்ப பேச்சுவார்த்தையை அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டியுள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்ட வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை வட்டாரங்களில் அறிய முடிகின்றது.