
சமையல் எரிவாயு கோரி திருகோணமலையில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்
லிட்ரோ நிறுவனத்தினால் நேற்று முதல் சமையல் எரிவாயு வினியோகம் ஆரம்பிக்க பட்டதாக அறிவித்ததை அடுத்து நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் சமையல் எரிவாயு கொள்வனவிற்காக வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது
அந்தவகையில் திருகோணமலை துவரங்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் களஞ்சிய சாலைக்கு முன்பாக வீதியை மறித்து சமையல் எரிவாயு கோரி நேற்று (ஜுன், 1) பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்
குறித்த பிரதேசத்தில் நேற்று இரவு முதல் நீண்ட வரிசையில் வெற்று சிலிண்டர்களுடன் எரிவாயு கொள்வனவிற்கு காத்திருந்ததாகவும் இன்று காலை சமையல் எரிவாயு திருகோணமலை விநியோகஸ்தரின் களஞ்சியசாலைக்கு வருகை தந்ததன் பின்னர் நேற்று முதல் வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்களில் முதல் 400 பேருக்கு மாத்திரமே சமையல் எரிவாயு வினியோகிக்கப்பட்டதுடன் மிகுதி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனைத்தும் கடைகளுக்கு விநியோகம் செய்ய கொண்டு செல்ல முற்பட்டபோது அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் குறித்த பிரதேசத்திற்கு பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது