
அதிகாரங்களையும், வளங்களையும் பெற்றுக் கொடுக்க நான் தயார்
தேசிய கொள்கைக்கான தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் இளைஞர்கள் குழு, தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய சுருக்கமான ஆலோசனைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த முன்மொழிவுகள் இன்று (01) முற்பகல், கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து கையளிக்கப்பட்டது.
தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கு நட்பான புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வது பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டது.
11 அடிப்படை விடயங்களைக் கொண்ட பிரேரணையை ஆராய்ந்த பின்னர், அடுத்த சில நாட்களுக்குள் அடுத்த கலந்துரையாடலை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பல்வேறு துறைகளில் நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல குழுக்கள் தயாராக இருப்பதாகவும், அந்த குழுக்களின் சாதகமான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அதிகாரங்களையும் மற்றும் வளங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.