இந்த நாட்டை ஆண்ட எந்த அரசியற் தலைவர்களிடமும் ஒரு நல்ல நோக்கம் இருக்கவில்லை - த.கலையரசன்
மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல யுத்திகளைக் கையாண்டனவே தவிர எந்த அரசியற் தலைவர்களிடமும் ஒரு நல்ல நோக்கம் இருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
இன்றைய தினம் கல்முனையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நாட்டிலே வாழுகின்ற பூர்வீக இனம் தொடர்ச்சியாக இவ்வாறான அடக்கு முறைக்கு ஆளாகக் கூடாது என்ற அடிப்படையில் எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக எமது மண்ணிலே ஏற்பட்ட அவலங்களை நினைவுகூர்ந்து இவ்வாறான நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
நிச்சயமாக தமிழர்களுக்கு ஒரு நிலையான சமாதானம் கிடைக்கப் பெற வேண்டும் என்ற எங்களது ஜனநாயக ரீதியான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இந்த அடிப்படையில், இப்போது வாழுகின்ற எமது இளைய சமூகம் எமது மண்ணிலே எமது இனம் வாழ்வதற்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அவ்வாறு வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்திலே தமிழர்கள் மட்டுமல்லாது ஏனைய .இனங்களும் இணைந்து சமத்துவமான ஒரு அரசியற் கட்டமைப்பினை உருவாக்குவதற்கு முன்நின்று உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.