
அமைதியை நிலைநாட்டி இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் - சீன பாதுகாப்பு அமைச்சு
எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டி இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாகச் சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக் பகுதிகளில் இடம்பெறும் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகச் சீன பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் வு கியான் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் சீனாவின் பெய்ஜிங்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்டு வரும் மோதல் நிலையினால் சீன - இந்திய இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் இடையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங்கிற்கும் (Xi Jinping) இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
000