
இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்கள் ஜே.வி.பியினரே - விரைவில் நீதிமன்றம் செல்வோம் என எச்சரிக்கும் முன்னாள் எம்.பி
இழப்புக்களை ஏற்படுத்தியவர்கள் தான் தற்போது நாம் இழப்பீடுகள் பெற்றுக் கொண்டமையை விமர்சிக்கின்றனர். எமது இல்லங்களை தீக்கிரையாக்கி சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள், அதற்கு தூண்டியவர்களை நாம் இனங்கண்டுள்ளோம்.
அவர்களுக்கெதிராக நீதிமன்றம் சென்று அவர்களிடமிருந்து இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது அரசியல்வாதிகள் சொத்து சேதங்களுக்காக பெற்றுக் கொண்ட இழப்பீடு குறித்து பெரிதாகப் பேசும் ஜே.வி.பி. 1980 களில் பாரியளவில் அரச சொத்துக்களுக்கு சேதப்படுத்தியதை மறுக்க முடியாது. அந்த சந்தர்ப்பத்திலும் அவற்றுக்காக நிதி ஒதுக்கப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட்டன.
இம்முறையும் இவ்வாறு அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலான சந்தேகநபர்கள் ஜே.வி.பி. ஆதரவாளர்களே. அவர்கள் சேதங்களை ஏற்படுத்தியமைக்கு இவர்களே முன்னின்று வழிகாட்டினர்.
எனது வீட்டை மீளப் புனரமைப்பதற்கும், அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கும் 23 இலட்சம் இழப்பீடு கிடைக்கப் பெற்றது. எனது வீடு சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் மாத்திரமின்றி, 141 கோடி இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியவர்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சட்டமா அதிபரிடம் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
சட்டமா அதிபர், பொலிஸ் ஆணைக்குழு,, நீதிமன்ற தீர்ப்பின் மீது கூட அரசாங்கத்தின் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. இது மிகவும் அபாயம் மிக்க நிலைமையாகும். என்றார்