
கிளிநொச்சி மாவட்டத்தில் கமநல சேவை நிலையங்களில் கையிருப்பில் உள்ள இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான அனுமதியினை கமநல அபிவிருத்தி திணைக்களம் வழங்கியுள்ளது
அரசாங்கத்தினால் இரசாயன உரப் பயன்பாட்டை நிறுத்தி சேதன உரப் பயன்பாட்டை ஊக்குவிக்குமாறு அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் கமநல சேவைநிலையங்கள் ஊடாக இராசயன வழங்கப்படுவது இடைநிறுத்தப்பட்டது.
இதனை அடுத்து மாவட்டத்தில் உள்ள எட்டு கமநல சேவை நிலையங்களிலும் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுவதற்கு இருந்த இரசாயன உரங்கள் களஞ்சியகளில் கையிருப்பில் இருந்துள்ளன.
இவ்வாறு கையிருப்பிலுள்ள இராசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதும் கமநல அபிவிருத்தி திணைக்களம் அதற்கான அனுமதிகளை வழங்காத நிலையில் குறித்த இராசயன உரம் களஞ்சிய சாலைகளில் களஞ்சிய படுத்தப்பட்டிருந்தது.
தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டு இருக்கின்ற உரத்தினை விவசாயிகளுக்கு வழங்குமாறு கமநல அபிவருத்தி திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது 3.8320 மெற்றிக் தொன் யூரியா 20.3493 மெற்றிக் தொன் ரீ.எஸ்.பீ 97.3189 மெற்றிக் தொன் எம். ஓ.பீ. மற்றும் 36.8650 மெற்றிக் தொன் கே.சீ.எல் ஆகிய உரங்களே அக்கராயன்குளம் கிளிநொச்சி முழங்காவில் பளை இராமநாத புரம் உருத்திரபுரம் புநகரி புளியம் பொக்கணை ஆகிய எட்டு கமநல சேவை நிலையங்களின் களஞ்சியங்களில் உள்ள உரத்தினையே இவ்வாறு விவசாயிகளுக்கு வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.