
முல்லைத்தீவு மல்லாவி திருநகர் பகுதியில் நேற்றிரவு(01-05-2022)மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது
குறித்த இடத்தில் நேற்றிரவு இரு குழுக்களுகிடையே மோதல்கள் இடம்பெற்றதாகவும் இதனால் பிரதேசத்தில் பதட்டமான சூழல் காணப்பட்டதாகவும் சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு 10:30மணி அளவில் மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எரியூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை; குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தலைக்கவசம் மற்றும் பாதணிகள் என்பனவும் காணப்படுகின்றன.குறித்த பிரதேசத்தில் யாரையாவது கடத்தி வந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பில். மல்லாவி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.மல்லாவி பிரதேசத்தில் குறிப்பிட்ட சில இளைஞர்கள் மல்லாவி பொலிசாரின் துணையுடன் சமூகவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதுடன் இரவு பகல் வேளைகளில் மது போதையில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்துதல் மற்றும் பொருட்களை கொள்ள இடுதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்கின்ற போதும் அது தொடர்பில் போலீசார் எந்தவித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை என்றும் ஏற்கனவே பிரதேச மக்கள் குறிப்பிட்டிருந்தனர்.