
முழங்காவில் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் பெருந்தொகையான நிதிகளில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வெளிமாவட்ட மற்றும் உள்ளுர் பேருந்துகள் தரித்து செல்ல நடவடிக்கை
கிளிநொச்சி முழங்காவில் மற்றும் பூநகரி ஆகிய பகுதிகளில் பெருந்தொகையான நிதிகளில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு பாவனைக்கு விடப்பட்டுள்ள போதும் அவற்றுக்கு வெளிமாவட்ட மற்றும் உள்ளுர் பேருந்துகள் தரித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட ஏ- 32 வீதியின் முழங்காவில் பகுதியில் பல மில்லியன் ரூபா செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ள போதும் ஏ-32 வீதியில் சேவையில் ஈடுபடும் வெளிமாவட்ட பேருந்துகளும் உள்ளுர் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளும் குறித்த பேரூந்து நிலையத்தில் தரித்து செல்லாது உணவகங்கள் மற்றும் வீதியோரங்களில் தரித்துச் செல்வதாகவும் இதனால் பயணிகள் சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எனவே குறித்த பேருந்து நிலையத்திற்குள் வெளிமாவட்டங்களில் இருந்து சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளும் உள்ளுர் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகளும் பேருந்து நிலையத்தில் தரித்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று சுமார் பதினொரு மில்லியனுக்கும் மேற் பட்ட தொகையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட புநகரி பொதுச் சந்தையுடன் கூடிய பேருந்து நிலையம் பொதுச் சந்தை என்பன எந்த வித பயன் பாடுகளுமின்றி காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.