
நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் மோத முயற்சி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் மோத முயன்ற நிலையில் பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. படுகாயம் அடைந்த நிலையில் இரத்தக் காயத்துடன் காணப்பட்ட நபர் ஒருவரை வாகனம் ஒன்றில் மூவர் ஏற்றிவந்திருக்கின்றனர்.அந்த வாகனத்திலிருந்து காயத்துடன் காணப்பட்ட நபர் தப்பி ஓடுவதற்கு முயன்று வீதியில் குதித்து ஓடியுள்ளார். இரண்டு தடவைகள் அவர் முயன்று இரண்டாவது தடவை குறித்த வாகனத்தையே செலுத்தி அந்த நபரை கடத்தல் காரர்கள் என்று நம்பப்படும் நபர்கள் மோதியுள்ளனர்.சம்பவத்தினால் குறித்த நபர் படுகாயம் அடைந்துள்ளார். அதேவேளை வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தை அடுத்து வாகனத்தில் வந்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.கனகபுரம் வீதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இருந்தே குறித்த நபர்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.படுகாயம் அடைந்தவர் அதிதீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இது கொலை முயற்சியாக இருக்கலாமா என்ற கோணத்தில்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணையினை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.