
டிக்டாக் செயலியை தடை செய்ய ஜோ பைடனுக்கு அதிகாரம்
டிக்டாக் செயலியை தடை செய்ய அதிபர் ஜோ பைடனுக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் 179 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களின் செல்போனில் இருந்து 'டிக்-டாக்' செயலியை நீக்க வேண்டுமென நேற்று வலியுறுத்தி இருந்தது. இதேபோல் நாட்டின் பாதுகாப்பு கருதி கனடாவில் அரசால் வழங்கப்படும் செல்போன், கம்ப்யூட்டர் உள்ளிட்ட அனைத்து மின்னணு சாதனங்களிலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய நேற்று தடை விதிக்கப்பட்டது. இதற்கு முன்பே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தாலும் அதனை நீக்க வேண்டும் என கனடா அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. பல ஐரோப்பிய நாடுகளும் அரசு ஊழியர்கள் 'டிக்-டாக்' செயலியை பயன்படுத்தவும், அரசின் மின்னணு சாதனங்களில் 'டிக்-டாக்' செயலியை பதிவிறக்கம் செய்யவும் தடைவிதித்து வருவது குறிப்பிடத்தக்கது.