
பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும் கல்வி அமைச்சர் தெரிவிப்பு
கொவிட்-19 தொற்று காரணமாக மாணவர்கள் பல நாட்கள் கற்றலை இழந்துள்ளதாகக் குறிப்பிட்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மற்றும் பாடசாலை விடுமுறையைக் குறைத்து எரிபொருள் நெருக்கடியினால் மாணவர்கள் இழந்த நாட்களை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், “தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலை நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இதனை ஈடுகட்ட ஆகஸ்ட் மாதம் வழங்கப்படும் பாடசாலை விடுமுறை நாட்கள் குறைக்கப்படும். அடுத்த வாரமும் பாடசாலை நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டால், டிசம்பரில் வழங்கப்படும் விடுமுறையைக் குறைப்பது குறித்தும் பரிசீலிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்
“2020 இல் 194 பாடசாலை நாட்களில், மேல் மாகாணத்தில் (WP) 94 நாட்கள் மட்டுமே பாடசாலைகள் இயக்கப்பட்டன. மற்ற மாகாணங்களில் 117 நாட்கள் பாடசாலைகள் இயங்கின. அதன் அடிப்படையில், மேல் மாகாணம் மற்றும் பிற மாகாணங்களில் உள்ள மாணவர்கள் முறையே 100 மற்றும் 77 பாடசாலை நாட்களை இழந்துள்ளனர். மேலும், 2021 ஆம் ஆண்டில் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டிய 229 நாட்களில், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் 102 நாட்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டன, மற்ற மாகாணங்களில் உள்ளவை 143 நாட்களுக்கு மட்டுமே நடைபெற்றன. 2021 ஆம் ஆண்டில், மேல்மாகாணத்தில் உள்ள மாணவர்கள் 127 நாட்களை இழந்துள்ளனர்” என்று பிரேமஜயந்த கூறினார்.