
தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முப்படையினர் உறுதி
கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
“கடந்த இரண்டு வருடங்களில், முப்படையினரின் செயற்பாடுகள்” என்ற தலைப்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (15) முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இந்த ஊடகச் சந்திப்பை வழிநடத்தினார்.
இதன்போது தொடர்ந்துரைத்த பாதுகாப்புச் செயலாளர், இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கு இடமில்லை என்றும் இலங்கையர் எவரும் தேவையின்றி அச்சப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
அரச புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய புலனாய்வுப் பிரிவினரும் இன்று ஒரே பலமான வலையமைப்பாகச் செயற்படுவதாகவும் கமல் குணரத்ன தெரிவித்தார்.
உயிர்த் தியாகம் செய்து போர் வீரர்கள் பெற்றுக்கொடுத்த சுதந்திரமும் நாட்டின் தேசிய பாதுகாப்பும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் கேள்விக்குறியாகியது. கடந்த ஆட்சியின் போது விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப் படவில்லை எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவி குடும்பங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நீதிமன்றக் கட்டமைப்புக்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்