
பிபின் ராவத், மனைவி உடல்கள் தகனம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் உடல்கள் நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உடல் கொண்டு செல்லப்பட்டது.
பிபின் ராவத்தின் மகள்கள் கிரித்திகா மற்றும் தாரணி ஆகியோரும், பெற்றோரின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதி ஊர்வலம் காமராஜர் மார்க் பகுதியில் தொடங்கியது.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இலங்கை, பூடான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் வருகை தந்தனர். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலத்தில் தேசிய கொடி ஏந்தி பொதுமக்கள் விண்ணை முட்டும் அளவிற்கு முழக்கமிட்டே வந்தனர்.
சீனாவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய முப்படைகளின் தளபதி பிபின் ராவத்திற்கு மக்கள் பிரியா விடை அளித்தனர். நாட்டிற்கு ஏற்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்களை முறியடித்த பிபின் ராவத்திற்கு பொதுமக்கள் தங்களது இறுதி நன்றி கடனாக வீட்டில் இருந்து தொடங்கி மயானம் வரை வழிநெடுக தேசிய கொடி ஏந்தி பாரத் மாதாகி ஜே, வந்தே மாதரம்.என கூறி அவருக்கு தங்களது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக செலுத்தினர்.
பிபின் ராவத்தின் சொந்த மாநிலமான உத்தராகண்டில் இருந்து பலர் வருகை தந்து வீர மகன் முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர். வாகனம் முன் வாத்தியங்களுடன், இசைக்கருவிகளுடன் வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.
டெல்லி கன்டோன் மென்ட் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட முப்படை தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
பிபின் ராவத், மதுலிகா ராவத்தின் உடலுக்கு அவரது மகள்கள் இறுதிச்சடங்குகளை தங்களது பெற்றோருக்கு கண்ணீர் மல்க செய்தனர்.
பின்னர் கன்டோன்மென்ட் மயானத்தில் பிபின் ராவத் மற்றும் மனைவி மதுலிகா ராவத் உடல் தகன மேடைக்கு கொண்டு வரப்பட்டது. பிபின் ராவத் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை அகற்றி அவரது மகளிடம் முறைப்படி ராணுவத்தினர் ஒப்படைத்தனர்.
ஒரே தகன மேடையில் பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள் வைக்கப்பட்டன. அதன் பின்னர் பிபின் ராவத், அவரது மனைவி உடலுக்கு மகள்கள் தீ மூட்டினர். அப்போது முழு ராணுவ மரியாதையுடன் 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க 800 வீரர்களின் மரியாதையுடன் பிபின்ராவத் உடல் தகனம் செய்யப்பட்டது.