
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலி
குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப்படை உறுதிபடுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரியில் உரை நிகழ்த்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டதாக விமானப்படை ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்பாராத விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்து விட்டதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது.
குரூப் கேப்டன் வருண் சிங், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தது குறித்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.