
அரசின் குறைபாடு பொருளாதாரத்தை அதால பாதாளத்திற்கு தள்ளி விட்டிருக்கின்றது
அரசின் வெளிநாட்டு கொள்கை நிலையில்லாது தளம்பலாக உள்ளமை, ராஜதந்திர தொடர்புகளை பேணுவதில் உள்ள குறைபாடு என்பன இன்று நாட்டின் பொருளாதாரத்தை அதால பாதாளத்திற்கு தள்ளி விட்டிருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை நிலையில்லாது தளம்பலாக உள்ளது. நாடுகளிடையில் ராஜதந்திர தொடர்புகளை பேணுவதில் சிக்கல் நிலைமை தோன்றி உள்ளது. இவை நாட்டின் பொருளாதாரத்தை அதால பாதாளத்தில் தள்ளிவிட்டிருக்கின்றது. இன்று அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, நாட்டிலே பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கின்றது. மசகு எண்ணெயை இறக்குமதி செய்துகொள்ள முடியாத நெருக்கடி நிலை தோன்றி உள்ளது. பல்வேறு தொழில் துறைகளிலான மூலப்பொருள் பற்றாக்குறையாக உள்ளது. துறைமுகத்தை வந்தடைந்துள்ள நூற்றுக்கணக்கான கொள்கலன்களை வெளியிலே கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கான தீர்வை அரசாங்கத்திடம் காண முடியவில்லை.
இன்றைய கோட்டாபய ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம், அரசியல் பலத்தை பெறுவதற்கு அன்று பல போலி கதைகளையும், போலி நாடகங்களையும் அரங்கேற்றியது. சிங்கள பௌத்த சமூகத்தை தூண்டி விடுவதற்க்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளை இலங்கையின் விரோதியாக காட்டியது. முஸ்லீம் நாடுகளை பயங்கரவாதத்திற்கு துணை நிட்ப்பவர்களாகவும், சிங்கள - பௌத்தத்திற்கு எதிரானவர்களாகவும் சித்தரித்தது. அதன் மூலம் இலங்கைக்கு இருந்த வெளிநாட்டு-கொள்கை தொடர்பான நடுநிலை, அணிசேரா தன்மையை சீர்குலைத்தது. இவற்றால், பூகோள அரசியல்- பொருளாதார சூழலில் இருந்து இன்று இலங்கை ஓரம்கட்டப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இன்று நாட்டில் ஏற்ப்பட்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடிக்கு உடனடியான தீர்வை எட்ட வேண்டும். அவ்வாறு இல்லாத போது உலக நாடுகளில் இருந்து ஓரம்கட்டப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நாடாக, மீள கட்டியெழுப்ப முடியாத நிலைக்கு, நாடு தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கூறினார்.