
பிரதமர் தலைமையில் 74 ஆவது தேசிய சுதந்திர தின ஏற்பாட்டுக்குழு கூட்டம்
74 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் 2022 ஏற்பாட்டுக் குழுவின் முதலாவது குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இன்று (29) இடம்பெற்றது.
“சவாலை வெற்றி கொண்ட சுபீட்சமானதொரு தாய்தாடு” எனும் தொனிப்பொருளில் 74 ஆவது தேசிய சுதந்திர தினம் கொண்டாட்டம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பெருமையுடன் கொண்டாட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தீர்மானித்தார்.
தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட சகல இராஜதந்திரிகளுக்கும் 74 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுக்குமாறு பிரதமர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூக்கு இதன்போது தெரிவித்தார்.
74 ஆவது சுதந்திர தினத்தை வெற்றிகரமாக கொண்டாடுவதற்கு அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் குறித்து இதன்போது பிரதமரின் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சுதந்திர தினத்திற்கு முன்னதாக நடைபெறும் தர்ம உபதேச நிகழ்வினை 2022 பெப்ரவரி 02 ஆம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க, கிறிஸ்தவ சமய வழிபாடுகள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் என்பவற்றை பரிந்துரைக்கும் பொறுப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 5 இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.