
குறை கூற வேண்டாம் - அரசின் கள்ள மௌனம் களைய வேண்டும்
இலங்கை தோட்ட முகாமையாளர் சங்கம், தோட்ட அதிகாரிகள் தாக்கப்படுவதையிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. தாம் பெருந்தோட்ட நிர்வாகத்தில் இருந்து விலக வேண்டி வரும் என எச்சரித்துள்ளது. அவர்களது கவலையும், கண்டனமும் நியாயமானவையே. எத்தகைய தாக்குதல் சம்பவங்களையும் தமிழ் முற்போக்கு கூட்டணி அனுமதிக்காது.
ஆனால், தோட்ட அதிகாரிகளின் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு காரணம் தொழிலாளரின் விரக்தி மனநிலையே. இன்று வரலாற்றில் என்றுமில்லாதவாறு அவர்களது வாழ்வாதாரம் உடைந்து நொறுங்கியுள்ளது. இதை சீர் செய்யாமல், அழிந்து வரும் பெருந்தோட்ட தொழில் துறையை சீர்த்திருத்தாமல் விரக்தி நிலையில் இருக்கும் தொழிலாளரை மாத்திரம் குறை கூற கூடாது.
தொழிலாளரதும், தோட்ட நிறுவனங்களதும் வருமான வீழ்ச்சி, தொழிலாளரின் விரக்தி நிலைமை, தொழிற்துறை சீர்கேடு ஆகிய இன்றைய சிக்கல்கள் எதுவும் ஆளுகின்ற அரசாங்கத்தின் கவனத்துக்கு இன்னமும் வரவில்லையா என கேட்கிறேன். அரசாங்கத்தில் இருக்கின்ற மலையக கட்சிக்கும் நிலைமையின் பாரதூரம் புரியவில்லையா என கேட்கிறேன். இந்த மௌனம் எமக்கு ஆச்சரியத்தை தருகின்றது. நிலைமையை சீர்செய்ய தம்மால் எதுவும் செய்ய முடியாத ஒரு கள்ள மௌனமா இது, எனவும் எனக்கு தெரியவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.