
இரசாயன உரப் பாவனை குறித்த அரச கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை
விஞ்ஞான ரீதியிலான அம்சங்களின் அடிப்படையில், சில தீர்மானங்களை மேற்கொண்ட போதும், இரசாயன உரப் பாவனை குறித்த அரச கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
“இரசாயன உரத் தடை நீக்கப்பட்டதா” என்ற தலைப்பில், ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (05) முற்பகல் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, லலித் வீரதுங்க இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையம் வாராந்தம் ஏற்பாடு செய்யும் ஊடகச் சந்திப்புத் தொடரின் இரண்டாவது சந்திப்பு, இன்று (05) இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த லலித் வீரதுங்க அவர்கள், பல தசாப்தங்களாக இரசாயன உரப் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ள ஒரு நாட்டை, சேதனப் பசளை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது சவாலான விடயம் என்றும் இதன்போது, பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுவது இயல்பானது என்றும் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துரைத்த விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க, இயற்கைக் கனிமங்கள் மற்றும் கிலேடட் நுண் தாவர ஊட்டக் கூறுகளை மட்டும் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மண் உயிர்த் தன்மையை விஞ்ஞானப்பூர்வமாக முழுமைப்படுத்துவதற்கு அவை அத்தியாவசியமான அம்சங்களென்றும் தெரிவித்தார்.
சேதனப் பசளைப் பயன்பாடு, அநேகமான விவசாயிகளுக்குப் புதியதோர் அனுபவம் என்பதால், இந்த நடவடிக்கைகளை வாராந்தம் கண்காணிக்கும் பொறிமுறை ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும் அதற்கு, தொழில்நுட்ப மற்றும் புதிய முறைமைகளைப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
அரச பல்கலைக்கழகங்கள், விவசாயப் பீடங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு என்பன இதற்காகப் பெற்றுக் கொள்ளப்படுவதுடன், அனைத்து ஊடக நிறுவனங்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.