
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் மீட்பு - பாகிஸ்தான் இராணுவம்
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த பயணிகள் தொடருந்திலிருந்து நேற்றைய தினம் 300 க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் மீட்கப்பட்டதாகப் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
மீட்பு நடவடிக்கையின் போது 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த மீட்பு நடவடிக்கைக்கு முன்னதாக பலூச் விடுதலை இராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பினால் 21 பொதுமக்களும் 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது.
தொடருந்து சிறைப்பிடிக்கப்பட்ட போது அதில் சுமார் 440 பயணிகள் இருந்ததாகப் பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சில பயங்கரவாதிகள் தொடருந்தை விட்டு வெளியேறி அருகில் உள்ள மலைப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
அவர்கள் துப்பாக்கி முனையில் பணயக் கைதிகள் சிலரை அழைத்துச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
எனினும் அழைத்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளின் எண்ணிக்கை இதுவரையில் உறுதியாகவில்லை எனவும், அவர்களை மீட்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளில் பலூச் விடுதலை இராணுவம் என்ற அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000