
தரவு கட்டமைப்பை எவராலும் திருட முடியாது - டிஜிட்டல் மயப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் - நாமல் ராஜபக்ஷ
தரவு கட்டமைப்பை எவராலும் திருட முடியாது. அரச கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
டிஜிட்டல் பொருளாதார கொள்கைத் திட்டங்களை அரசாங்கம் உருவாக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. இருப்பினும் அரசாங்கத்தின் கொள்கைக்கும் இலக்குக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.
டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக 15 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கான திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை.
இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் தரவு பாதுகாப்பு முகவர் நிலையத்தை அமைப்பதற்கு எமது அரசாங்கத்தில் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
தரவு முகவர் நிலையத்தை அமைப்பதால் நாட்டின் உள்ளக தரவுகள் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அல்லது திருடப்படும் என்று தற்போதைய அரசாங்கம் தான் அப்போது வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டது.
அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று வெளிநாட்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தரவு பாதுகாப்பு முகவர் நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளனர். ஆகவே அன்று குறிப்பிட்டது தவறு என்று இன்று குறிப்பிடும் நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
தரவு பாதுகாப்பு முகவர் நிலையத்தை அமைத்து, சட்ட பாதுகாப்பை வலுப்படுத்தினால் தரவுகளை மோசடி செய்ய முடியாது.
ஆகவே, தரவு பாதுகாப்பு முகவர் நிலையத்தை அமைப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அரச சேவை மற்றும் நீதிமன்ற கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
000