
மீண்டும் வரி அதிகரிப்பு? - பந்துல குணவர்தன
தற்போதைய சூழ்நிலையில் சம்பளத்தை உயர்த்துவதற்கு போதிய வருமானம் கிடைக்க வேண்டுமானால் திறைசேரி கூடுதல் வருமானத்தை பெற வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரச சொத்துக்களை விற்பது, வரிகளை மேலும் அதிகரிப்பது, புதிய வரிகளை விதிப்பது ஊடாக மாத்திரமே திறைசேரிக்கு கூடுதல் வருமானத்தை பெற முடியும் என அவர் குறிப்பிட்டார்.
இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக ஏதாவது ஒரு வகையில் சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, 2022ஆம் ஆண்டு திறைசேரிக்கு கிடைத்த வரி வருமானம் 1,751 பில்லியன் ரூபாவாகும்.
இதில் 2022ஆம் ஆண்டு அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக மாத்திரம் 956 பில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
ஓய்வூதியத்திற்காக 309 பில்லியனும், சமூர்த்தி உள்ளிட்ட மானியங்களுக்காக 506 பில்லியனும் செலவிடப்பட்டதாக அமைச்சர் கூறினார். இதன்படி, அரச வரி வருமானத்தில் இருந்து இந்த செலவுகளை மட்டுமே செலுத்த முடிந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவிக்கின்றார்.வரலாற்றில் இந்த நிலைமையை கடன் பெற்றும், மற்றும் பணம் அச்சடித்தும் தீர்த்து வைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.இதேவேளை, நாடு முழுவதும் இடிந்து விழும் நிலையில் உள்ள மற்றும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள சுமார் 30 பாலங்களை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.