
வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிக்கள் – ஜனாதிபதி இடையே இரண்டாவது நாளாகவும் இன்று சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினமும் தொடரவுள்ளது. இந்த சந்திப்பில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
நேற்றைய தினம், ஜனாதிபதிக்கும், வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில், இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
குறித்த சந்திப்பில், நல்லிணக்கப் பொறிமுறைகள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விவகாரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எனினும், குறித்த சந்திப்பில், தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.