
பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதியின் கோரிக்கை
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் பங்கேற்புடன் நேற்று (05) லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் போது மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துகளை கூறிய ஜனாதிபதி, அவருடன் சுமூகமாக கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு, இச் சந்திப்பில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.
இம்மாநாட்டில் இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உரையில் வலியுறுத்தினார்.
டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரினார்.
இம்மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ‘Fireside Chat’நிகழ்வில் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க கலந்துகொண்டார்.
‘Fireside Chat’ நிகழ்வானது பொதுநலவாய மாநாட்டிற்கு அமைவான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் மேடையாகும்.
இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கானா நாட்டு ஜனாதிபதி நானா எட்டோ அக்குபோ – எட்டோ (Nana Addo Dankwa Akufo-Addo) அவர்களையும் லண்டனில் சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கை மற்றும் கானாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.