
சிறையில் மூட்டைப்பூச்சியால் உயிரிழந்த கைதி
லாஷான் தாம்சன் ஒரு சிறு குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதிகாரிகள் தீர்ப்பளித்த பிறகு ஃபுல்டன் மாவட்ட சிறையின் மனநல பிரிவில் வைக்கப்பட்டார்.
அவரது குடும்ப வழக்கறிஞரான மைக்கேல் டி ஹார்பர், தாம்சனின் உடல் முழுக்க பூச்சிகள் ஏற்படுத்திய துளைகள் நிறைந்திருந்ததைக் காட்டும் புகைப்படங்களை வெளியிட்டார்.
அவர் குற்றவியல் விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளதோடு, வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் செய்தியாளர்களிடம் கூறினார்.
“தாம்சன் ஒரு மோசமான சிறை அறையில் பூச்சிகள் மற்றும் மூட்டைப் பூச்சிகளால் உயிருடன் சாப்பிடப்பட்டதால் இறந்து கிடந்தார். தாம்சன் வைக்கப்பட்டிருந்த சிறை ஒரு நோயுற்ற விலங்குக்குக்கூட ஏற்றதல்ல. இப்படியொரு நிலையில் அவரை வைத்திருக்கக்கூடாது,” என்று வழக்கறிஞர் ஹார்பர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
ஃபுல்டன் கவுன்டியின் மருத்துவ கண்காணிப்பாளருடைய அறிக்கையின்படி, தாம்சன் செப்டம்பர் 19ஆம் தேதியன்று (அவர் கைது செய்யப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகு) சிறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையில் பேச்சு மூச்சின்றி கிடந்தார். உள்ளூர் காவல்துறை, மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் அவரை உயிர்ப்பிக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து அவர் இறந்து விட்டதாக யுஎஸ்ஏ டுடே தெரிவித்துள்ளது.
தாம்சனின் நிலைமை மோசமடைந்து வந்ததை தடுப்புக்காவல் அதிகாரிகளும் மருத்துவப் பணியாளர்களும் கவனித்ததாகவும், இருந்தும் அவருக்கு உதவிகளை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிறைப் பதிவுகள் காட்டுகின்றன என்று வழக்கறிஞர் ஹார்பர் கூறுவதாக பிபிசியின் அமெரிக்க ஊடகப் பங்குதாரர் சிபிஎஸ் செய்தியறிக்கை தெரிவிக்கிறது.
மருத்துவ பரிசோதகரின் அறிக்கை மனநல வார்டில் உள்ள அவரது அறையில் “கடுமையான மூட்டைப்பூச்சிப் பரவல்” இருப்பதாகக் கூறியுள்ளது. ஆனால் தாம்சனின் உடலில் அதிர்ச்சிக்கான தெளிவான அறிகுறிகள் எதுவுமில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது இறப்புக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.