
அரச உத்தியோகத்தர்களுக்கான நிவாரணம் குறித்த யோசனை நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்படும் : அரசாங்கம்
வருமான வரி அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு , அரச உத்தியோக்கதர்களுக்கு ஏதேனும் நிவாரணத்தை வழங்க முடியுமெனில் அது தொடர்பான யோசனை அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (4) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , வருமான வரி தொடர்பில் தொழிற்சங்கங்கள் அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துரையாடியிருந்தன.
எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்ட போது , குறிப்பிட்டளவு வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக விரும்பினாலும் , விரும்பாவிட்டாலும் வரி தொடர்பில் இணங்க வேண்டியேற்பட்டது. எனவே சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த கட்ட கலந்துரையாடல் இடம்பெறும் போது , அரச உத்தியோகத்தர்களுக்கு ஏதேனுமொரு நிவாரணத்தை வழங்க முடியும் எனில் அதாவது கொடுப்பனவுகள் உள்ளிட்டவை தொடர்பான யோசனையை அரசாங்க தரப்பில் முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
வருமான வரி செலுத்த வேண்டிய குழுவில் உள்ளடங்காத பலர் உள்ளனர். இவ்வாறனவர்களையும் வரி செலுத்தும் குழுவில் உள்ளடக்கினால் சிறியளவானோரிடம் அதிக வரி அறவிடுவதற்கு பதிலாக , பெரும்பாலானோரிடம் நியாயமான வரியை அறவிட முடியும் என்றார்.